மேட்டூர், அக். 15–
கடந்த ஒருவாரமாக காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.10 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒருவாரத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகும் பகுதியில் மழை பொழிவு உள்ளிட்ட காரணங்களாலும், கர்நாடன அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 6 நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9.80 அடி உயர்ந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது.
நீர் இருப்பு 12.66 டிஎம்சி
இந்நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,633 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,433 கன அடியாக சற்று குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 12.66 டிஎம்சியாக உள்ளது.
நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூரில் மழை அளவு 30.40 மி.மீ பதிவாகி உள்ளது.