மேட்டூர், நவ. 07–
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று 11,063 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில் ,அணையின் நீர்மட்டம் 107 அடியாக உள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 10,566 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 9,929 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 11,063 கன அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 107 அடி
அணையின் நீர் மட்டம் 106.81 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 73.94 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.