எழும்பூர் கண் மருத்துவமனை அறிக்கை
சென்னை, செப்.12–
மெட்ராஸ் “ஐ” என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய், இது சென்னையில் முதலில் கண்டறியப்பட்டதால் மெட்ராஸ் “ஐ” என்று அழைக்கப்படுகிறது.
அறிகுறிகள்: கண் வலி மற்றும் கண் சிவந்து போகுதல், கண்களில் நீர் வழிதல், கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுதல், கண்களில் அழுக்கு வெளியேறி இமைப்பகுதிகள் ஒட்டிக் கொள்ளுதல், கண்களில் தூசி அல்லது வேறு வெளிப்பொருள் உள்ளது போன்ற உணர்வு ஏற்படுதல், இது பருவநிலை மாறுபாட்டினாலும் ஒரு விதமான வைரஸ் மற்றும் பாக்டீரியவால் வரக்கூடியது, ஒருவர் நேடியாக பார்ப்பதினால் வராது.
குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் மற்றவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது அதனால் அவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் அல்லது கருவிகளை மற்றவர்கள் உபயோகிக்கக்கூடாது, கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும்போது மிக எளிதாக பரவக்கூடியது. இது ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் மட்டுமே இருக்கும்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டால் செய்ய வேண்டியவை
* கண்கள் மற்றும் கைகளை நல்ல நீரினால் அடிக்கடி கழுவ வேண்டும்
* கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும்
* கண் மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று சொட்டு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்
* சுயமாக மருந்துகளை பயன்படுத்தக்கூடாது
* பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்
* தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய திசு காகிதம் மற்றும் கைக்குட்டையை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
* கண் நோய் சரியாகும் வரை அனைவரிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டும்
* கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.
* நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வைக்கும்.
எத்தனை பேர் பாதிப்பு?
ஜுலை மாதம் – 78 நபர்கள், ஆகஸ்ட் மாதம் – 248 நபர்கள், செப்டம்பர் (இதுவரை) – 283 நபர்கள்
புறநோயாளிகள் – 780 (நாளொன்றுக்கு), உள்நோயாளிகள் – 180 (நாளொன்றுக்கு), அறுவைச் சிகிச்சைகள் – 28,236 (ஜனவரி 2023 முதல் ஆகஸ்ட் 2023 வரை).
இத்தகவலை சென்னை எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.