சென்னை, அக். 11–
திமுக கொள்கை தூணாக விளங்கிய முரசொலி செல்வம் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறவுள்ள நிலையில், முரசொலி நாளிதழுக்கு இவர் கடைசியாக எழுதிய கேள்வி பதில் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரத்தம்மாளின் இளைய மகனும், கலைஞரின் மருமகனுமாகிய முரசொலி செல்வம் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து அவரது உடல் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இருந்து சென்னை கோபாலபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 4.30 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
முரசொலி செல்வத்தின் மறைவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பெரிதும் பாதித்துள்ளது. அவரது உடலை நேரில் கண்டதும் கண்ணீர் விட்டு கதறினார். இதையடுத்து தன்னுடைய இரங்கல் செய்தியில், முரசொலி செல்வம் மறைந்த செய்தி என் இதயத்தை இடிபோல் தாக்கியது. சிறுவயது முதலே அண்ணனாக, வழிகாட்டியாக, இயக்க பணிகளில் ஆலோசனைகள் வழங்கி நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து கழகத்துடனான வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர். கலைஞர் நம்மை விட்டு பிரிந்த பிறகு நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை கொள்கை தூணை இழந்து நிற்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முரசொலி கேள்வி பதில்
இந்நிலையில், முரசொலி நாளிதழுக்கு நேற்று முன் தினம் (அக்டோபர் 9) நள்ளிரவில் தன் கைப்பட ’ஒரு கேள்வி ஒரு பதில்’ என்ற பெயரில் பெட்டி செய்தி ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில்,
கேள்வி: அரசு நிகழ்ச்சிகளுக்கு திமுக சின்னம் பொறித்த டி சர்ட் அணிந்து துணை முதலமைச்சர் கலந்து கொண்டு மரபு மீறி செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?
பதில்: கருப்பு, வெள்ளை, சிகப்பு பார்டர் பொறித்த கட்சி சின்ன கரை வேட்டிகளை அணிந்து கொண்டு அவருடைய கட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை முதலமைச்சர்களாக பல அரசு விழாக்களில் கலந்து கொண்டதும் மரபு மீறலா? உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவி உடையிலேயே ஒரு முதலமைச்சர் உலா வருகிறாரா? அது எத்தகைய செயல்? விளக்குவாரா ஜெயக்குமார்?
இவ்வாறு எழுதி முரசொலிக்கு அனுப்பியுள்ளார். இது நேற்று முரசொலியில் 3ஆம் பக்கத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.