மும்பை, அக். 19–
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கல்யாண் ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ஸ்டேஷனில், புறநகர் ரெயில் 2 வது நடைமேடையை நெருங்கும் போது, ரெயில் தடம் புரண்டதால், அந்த வழித்தடத்தில் ரெயில் சேவைகள் 30 முதல் 45 நிமிடங்கள் தடைபட்டன. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெயின்லைனில் தடம் புரண்டது
கல்யாண் ரெயில் ஜங்ஷன், மத்திய ரெயில்வேயின் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றாகவும், புறநகர் மற்றும் நீண்ட தூர ரயில்களுக்கான முக்கிய நிறுத்தமாகவும் இருப்பதால், குறிப்பிடத்தக்க இடையூறுகளை சந்தித்தது. இரவு 9 மணியளவில் டிட்வாலா-சிஎஸ்எம்டி ரயில் பிளாட்பாரம் எண் 2 ல் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகி, மெயின்லைனில் தடம் புரண்டது.
இந்த விபத்தில் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும், ரெயில் பிளாட்பாரம் எண் 2 இல் நின்று கொண்டிருந்த போது, பின்பக்கப் பெட்டி மெதுவான வேகத்தில் தடம் புரண்டது” என்று மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து மும்பை பிரிவு DRM, தனது டுவிட்டர் பதிவில், “தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக, மெயின்லைன் சேவைகள் கால அட்டவணைக்குப் பின் இயங்குகின்றன. சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும், தடம் புரண்டது குறித்து அவர் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு செய்தியில் அறிவித்திருந்தார்.