கதைகள் சிறுகதை செய்திகள்

முன்பதிவு…! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

சிவச்சந்திரனுக்கு பஸ் பயணம் என்றால் வேப்பங்காயாய் கசக்கும்.. அருகருகே அமர்ந்து கொண்டு பயணம் செய்யும் அவஸ்தை அவனுக்குச் சொல்லி மாளாது. அருகில் இருப்பவன் தோள்பட்டை இடித்தும் கைகள் உரசிக் கொள்ளும் எரிச்சல். வேர்வை நாத்தம் . இப்படி இந்த அவஸ்தைகளோடு பயணம் செய்வதை அடியோடு தவிர்ப்பான் சிவச்சந்திரன்.

ஒரு முறை இரவுப் பயணம் மேற்கொண்ட போது, அருகில் இருக்கும் நபருக்கும் இவருக்குமான கைப்பிடியில் கை வைக்கும் சண்டையில், இருவரும் கை வைக்க மாறி, மாறி எடுத்துக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் எரிச்சல் வந்து, கடைசியில் யாரும் கை வைக்காமலே அந்தக் கைப்பிடி இருந்தது. இதை சிவச்சந்திரன் மறக்கவே இல்லை. அதனால் நீண்ட தூரப் பஸ் பயணம் என்றால் அவனுக்கு ஒரு விதமான கோபமும் எரிச்சலும் வரும் .அருகில் அமர்ந்திருப்பவன் நல்லவனா? கெட்டவனா? குடிகாரனா ? சுத்தமானவனா? தினமும் குளிப்பவனா ? பான்பராக் புகையிலை. ஏதும் போட்டு வருபவனா? இவர்கள் அருகில் எல்லாம் எப்படி அமர்ந்து பயணம் செய்வதென்று ரொம்பவே புலம்புவான்.

இன்னொரு முறை பயணம் செய்த போது, அருகில் இருந்தவன் சிவச்சந்திரன் தோளில் தூங்கித் தூங்கி அவன் தோள்பட்டையில் விழுந்து சிவச்சந்திரனின் தூக்கத்தை கெடுத்தது, இன்னும் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. தலையைத் திருப்பித் திருப்பி இரவெல்லாம் தூங்காமல் இருந்தான் சிவச்சந்திரன். இனிமேல் பஸ் பிரயாணம் கூடவே கூடாது. அதுவும் இரவுப் பயணம் என்பது அறவே ஆகாது. இந்த மனிதர்களுடன் சேர்ந்து பயணிப்பது மிகவும் கொடுமை என்று நினைத்தான் சிவச்சந்திரன். தூங்குபவனைத் தட்டி எழுப்பி

” ஹலோ நீங்க இப்படி தூங்கி விழுந்தா, எனக்கு எப்படித் தூக்கம் வரும்? ஒன்னு அந்தப் பக்கமா திரும்பிப் படுங்க .இல்ல கீழ போய் படுங்க. இப்படி என் தோள்பட்டையில சாஞ்சிக்கிட்டே இருந்தா எனக்கு தூக்கம் வராது

என்று அந்த இரவிலும் அருகில் இருந்த பயணியைக் கடிந்துக் கொண்டான் சிவச்சந்திரன்.

“சாரி சார். மன்னிக்கணும் … மன்னிக்கணும் …..”

என்று சொல்லிச் சொல்லியே மறுபடியும் சிவச்சந்திரன் மேலே விழுந்து விழுந்து அவன் துக்கத்தைக் கெடுத்துக் கொண்டே இருந்தான் அந்தப் பயணி. ஒரு பக்கம் எரிச்சல். ஒரு பக்கம் கோபம் .வேறு வழியில்லை. இன்று இவனுடன் தான் பயணம் செய்ய வேண்டும் “

என்ற அவஸ்தையைப் பொறுத்துக் கொண்டான் சிவச்சந்திரன்.

ஒரு நாள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தது. அந்த இரவிலும் பஸ்ஸில் தான் போக வேண்டிய என்ற நிலைமை ஏற்பட்டது .வேறு வழியில்லை. இரவுப் பயணம் காலையில் தான் ஊருக்கு போய் சேர முடியும்.

‘ சரி என்னதான் நடக்கும் பார்க்கலாம் ‘ ….பார்க்கலாம் ‘ என்று பஸ்ஸில் ஏறி அமர்ந்தான். ஏற்கனவே ரிசர்வ் செய்யப்பட்டிருந்ததால், ஆங்காங்கே ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். சிவச்சந்திரன் அவனுக்குரிய இருக்கையில் அமர்ந்தான். அவன் அருகில் இருந்த இருக்கை காலியாக இருந்தது. பஸ் புறப்படத் தயாரானது. .ஏறக்குறைய எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். சீட்டுகளை எல்லாம் பரிசோதனை செய்தார், நடத்துனர். சிவச்சந்திரன் இருக்கையின் அருகில் இருக்கும் இருக்கை காலியாக இருப்பதைப் பார்த்தார். ஒரு நிறுத்தத்தில் ஒரு பயணியை ஏற்றி சிவச்சந்திரன் அருகில் இருந்த இருக்கையில் அமர வைக்க முனைந்தார்.

“சார் மன்னிக்கணும் என்னோட டிக்கெட்டை நீங்க சரியா பாத்தீங்களா?

என்று நடத்துனரிடம் கேட்டான் சிவச்சந்திரன் .

“என்ன ஆச்சு?”

“நல்லா பாருங்க சார் “

என்று சிவச்சந்திரன் சொல்ல

தன் கையில் இருந்த இன்வாய்ஸை சரிபார்த்தார், நடத்துனர்.

“ஆமா, உங்க பக்கத்து சீட்டையும் ரிசர்வ் பண்ணியிருக்கீங்களா ?

” ஆமா”

” ஆள் வருவாங்களா?”

என்று நடத்துனர் கேட்ட

அதற்கும் ஆமா என்றே தலையாட்டினான் சிவச்சந்திரன்.

” யாரும் வரலையே ? “

என்று நடத்துனர் கேட்க

” யாரும் வர மாட்டாங்க. நான் தான் இந்தச் சீட்டையும் சேர்த்து ரிசர்வ் பண்ணியிருக்கேன்”

என்றான் சிவச்சந்திரன்

“ஏன் எதற்கு ? என்று நடத்துனர் கேட்க

” எஸ் சார். நைட் எல்லாம் எவனோட பக்கத்திலயும் உட்கார்ந்து போக முடியல. கஞ்சா, தண்ணீ, பாக்கு போட்டுட்டு வாரானுங்க. என் தோள்ல சாஞ்சு சாஞ்சு விழுந்து என் தூக்கத்த கெடுக்கிறானுங்க .அதனால தான் இனிமே எந்த ஊருக்கு பயணம் போனாலும் என் பக்கத்து சீட்டையும் நானே ரிசர்வ் பண்ணிரணும்னு முடிவு செய்து பண்ணிட்டேன்” என்றான் சிவச்சந்திரன். அதுவரையில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் எல்லாம் சிவச்சந்திரன் பேசுவதைக் கேட்டு விழித்துக் கொண்டார்கள் .

“அவர் சொல்றதும் சரிதான் .அவரு அந்த சீட்டுக்கும் பணம் கொடுத்து தானே ரிசர்வ் பண்ணி இருக்கிறாரு. அது அவருடைய இஷ்டம். உங்களுக்கு அந்த சீட்டுல ஆள் இருக்கு, இல்ல அப்படிங்கிறது கவல வேணாம்.. அந்தச் சீட்டுக்கு அவர் காசு கொடுத்துட்டார்ல அவர தொந்தரவு பண்ணாதீங்க”

என்று சக பயணிகள் அத்தனை பேரும் சிவச்சந்திரனுக்கு ஆதரவாக பேசினார்கள்.

” என்னோட உணர்வுகளப் புரிந்து கொண்டதற்கு நன்றி “

என்றான் சிவச்சந்திரன்.

” இதுவும் நல்லாதான் இருக்கு. நாமளும் அடுத்த தடவை டிக்கெட் புக் பண்ணும் போது, பக்கத்து சீட்டையும் சேர்த்து ரிசர்வ் பண்ணிர வேண்டியது தான் ” என்று பேசிக்கொண்டார்கள், பயணிகள். சிவச்சந்திரனின் அருகில் இருந்த இருக்கை காலியாகவே இருந்தது.

இளையராஜாவின் பாடலோடு, அந்த இரவு நேரப் பயணம், வேகமாகச் சென்று கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *