சென்னை, ஏப் 16–
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கந்தசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
‘‘குளித்தலை சட்டமன்றத்தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கந்தசாமி நேற்று முன்தினம் (14–ந் தேதி) மறைந்தார் என்று அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கந்தசாமி அண்ணா தலைமையில் தி.மு.க. முதன்முதலாக ஆட்சியைப் பிடித்து இந்திய அரசியல் களத்தில் மிகப்பெரும் மாற்றத்துக்கு வித்திட்ட 1967-–ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், கலைஞர் தலைமையில் எதிர்கொண்டு வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற 1971–ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் குளித்தலை தொகுதியில் வென்ற பெருமைக்குரியவர் ஆவார்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், குளித்தலை தொகுதி கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.