சென்னை, அக். 23–
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
வீட்டு வசதி துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது, தனியார் நிறுவனத்திற்குக் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் உள்ளது. இதையொட்டி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகச் சமீபத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், தற்போது அமலாக்கத்துறை தனியே ஒரு வழக்குப் பதிவு செய்து சோதனையிட்டு வருகிறது.
தஞ்சை ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், சென்னை தி.நகரில் உள்ள அவரது மகன் அலுவலகம், அசோக் நகரில் உள்ள அவரது மகன் வீடு, இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.