கதைகள் சிறுகதை செய்திகள்

முதல் சீட்டு…! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும் என்று முடிவு எடுத்தார், ஞானையா .வெயிலுக்கு முன்னால் சென்று விட்டால் வேலையை அழகாக முடித்து விடலாம் என்று எண்ணியவர், அன்று இரவே அத்தனையும் முடிவு செய்து அதிகாலை ஐந்து மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி அருகில் இருந்த பஸ் நிலையத்திற்கு வந்தார்.

ஓடிக் களைத்த பேருந்துகள் எல்லாம் ஓரிடத்தில் அமைதியாக நின்றிருந்தன.. சில பேருந்துகள் தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு சுத்தமாக இருந்தன. சில பேருந்துகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். புறப்பட தயாராக இருந்த ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தார், ஞானையா.

ஓட்டுநர் , நடத்துனர் இருவரும் இல்லாத அந்தப் பேருந்து டுர்… டுர்…டுர்… டுர் … என்ற சத்தத்தோடு நின்று கொண்டிருந்தது .அரக்கப் பரக்கப் பார்த்தவர் கண்டிப்பாக இந்தப் பேருந்தத்தைத் தான் முதலில் எடுப்பார்கள். இதில் ஏறி அமர்ந்து கொள்ளலாம் என்று அமர்ந்து கொண்டார்.

சட்டசபைக் கூட்டத்திற்கு போவது போல நடத்துனர்கள், ஓட்டுனர்கள் ஆங்காங்கே நின்று ஏதேதோ பேசிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போது பேருந்தை இயக்குகிறார்களோ, அப்போது தான் பணிமனையை விட்டு பேருந்துகள் வெளியே வரும் என்ற இறுமாப்பில் அவர்கள் இருந்தார்கள் .

ஓட்டுனர்கள் பேருந்தை ஓட்டிப் போவதால் பேருந்து நமக்குத் தான் சொந்தம் என்று நினைக்கிறார்கள். கண்டக்டர் டிக்கெட் கொடுப்பதால் பணம் எல்லாம் அவங்க வீட்டுக்கு கொண்டு போறதா நினைச்சுக்குறாங்க .இது அரசாங்க பஸ் .நாம அரசாங்க ஊழியர்கள் என்று யாரும் நினைப்பதில்லை. மக்களுக்கு சேவை செய்கிற மனப்பான்மை யாருக்கும் இருப்பதில்லை என்று தனக்குத்தானே நொந்து கொண்டார் ஞானையா

சிறிது நேரம் கழித்து ஞானையா அமர்ந்திருந்த பேருந்துக்கு நடத்துனரும் ஓட்டுனரும் வந்தார்கள். இருவரும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் போல பத்தி, சூடம், பூ மணக்கும் கற்பூரம் , வாசனையான சந்தனம், குங்குமம் என்று பேருந்தில் இருந்த சாமி படத்திற்கு முன்னால் வைத்து சாமி கும்பிட்ட பிறகே பேருந்தை இயக்கத் தயாரானார்கள்.

அந்த அதிகாலையில் பணிமனையில் இருந்து கிளம்பிய அந்தப் பேருந்தில் ஞானையா மட்டுமே இருந்தார். பேருந்தில் ஒருவர் மட்டும்தானே இருக்கிறார் ? அப்புறம் சீட்டைக் கொடுக்கலாம்

என்று நினைத்த நடத்துனர், ஓட்டுனர் அருகே நின்று கொண்டு அவர்களுக்குத் தெரிந்த மொழியில் நகைச்சுவை சொல்லிச் சிரித்துக் கொண்டார்கள் . பணிமனையில் இருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து இரண்டு ,மூன்று நிறுத்தங்களைக் கடந்து சென்றது. அப்போதும் அந்தப் பேருந்தில் யாரும் ஏறவில்லை

ஞானையா அருகே வந்த நடத்துனர்

” டிக்கெட் … டிக்கெட்… எங்க போகணும்?”

என்று கேட்க “பாரிஸ் போகணும் “

என்று சொல்லித் தன் பாக்கெட்டில் இருந்த காசை எடுத்துக் கொடுத்தார், ஞானையா.பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்து விட்டு, மறுபடியும் ஓட்டுனர் அருகே சென்ற நடத்துனர் மறுபடியும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

சில, பல நிறுத்தங்கள் போகப்போக பேருந்தில் ஏற ஆரம்பித்தார்கள், ஆட்கள். ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களும் பேருந்தை நோக்கி ஓடி வந்தார்கள். ஓரளவுக்கு பேருந்து நிறைந்தது. மித வேகத்திலும் அதி வேகத்திலும் சென்று கொண்டிருந்தது, பேருந்து. ஞானையா அருகே அமர்ந்த ஒருவர்

” சார் டிக்கெட்… “

என்று நடத்துனரிடம் தன் அகவை முதிர்ந்தவருக்கான பயணச் சீட்டைக் கொடுத்து, பேருந்துப் பயணச் சீட்டை வாங்கினார். இதைப் பார்த்த ஞானையா அவரைப் பார்த்து விட்டு ஜன்னல் பக்கம் திரும்பினார். ஏறக்குறைய பொழுது புலர்ந்தது போல் இருந்தது .ஆட்களும் ஆங்காங்கே ஏறி அமர்ந்தார்கள். ஞானையா அருகில் அமர்ந்திருந்தவர் ஞானையாவுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

” எங்க போறீங்க ? ” என்று ஞானையாவிடம் கேட்க

நான் பாரிஸ் போறேன்”

” நானும் பாரிஸ் தான் போறேன் “

என்று முதலில் தயக்கத்தோடு பேச ஆரம்பித்தவர்கள். போகப்போக சரளமாக பேச ஆரம்பித்திருந்தார்கள் .பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.

அவ்வளவாகத் தார் சாலையில் வாகனங்கள் இல்லாததால் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது பேருந்து

ஏதோ உறுத்தல் எடுத்தவராய் ஞானையாவிடம் வந்த நடத்துனர்

” ஐயா நீங்க எங்க போகணும்னு டிக்கெட் வாங்குனீங்க “

என்று கேட்க ,” பாரீஸ் தம்பி எதுக்கு ? ” என்று கேட்டார், ஞானையா

” இல்ல சும்மா கேட்டேன். உங்களுக்கு வயசு என்ன ஆச்சு? “

என்று மறுபடியும் நடத்துனர் கேட்டதும்

பொழுது விடிஞ்சா பொழுது இருண்டா எல்லா மனுஷனுக்கும் வயசு ஏறிட்டு தான் இருக்கு .எனக்கு எழுவது வயசு தாண்டிருச்சு தம்பி ” என்று பெருமையாக சொன்னார், ஞானையா.

” அப்படின்னா உங்களுக்கு அகவை முதிர்ந்த பெரியவங்களுக்கான டிக்கெட் இருக்குமே? அத ஏன் என்கிட்ட குடுக்கல. என்று நடத்துனர் கேட்க

எதுவும் பேசாமல் இருந்தார், ஞானையா

“முதியோர்களுக்கான பயணச்சீட்டு வச்சிருக்கீங்க தானே?”

என்று மறுபடியும் ஞானையாவிடம் நடத்துனர் கேட்க

வாய் திறந்து எதுவும் பேசாமல் தலையை மட்டுமே ஆட்டினார். தன்னிடமிருந்த வயது முதிர்ந்ததற்கான பயணச்சீட்டை காட்டினார்.

” இதை கொடுத்திருந்தா நான் உங்களுக்கு இலவச டிக்கெட் கொடுத்திருப்பேனே?” ஏன் காசு குடுத்து டிக்கெட் எடுத்தீங்க’ என்று நடத்துனர் கனிவாய் கேட்க

” இல்லை தம்பி, நான் தான் முதன் முதல்ல இந்த பஸ்ல ஏறுனேன். முதல் வியாபாரம். முதல் டிக்கெட் . இந்த ஓசி டிக்கெட் குடுத்தா சரியா இருக்காதுன்னு தான் காசு கொடுத்து டிக்கெட் வாங்குனேன். நான் முதியோருக்கான டிக்கெட் கொடுத்து வாங்குனா அது நல்லா இருக்காது தம்பி. ஒருவேளை, நான் அந்த முதியோருக்கான சீட்டு கொடுத்துட்டு சீட்டு வாங்கி உங்களுக்கு பணம் வசூல் ஆகலன்னா, யாருடா மொத மொத டிக்கெட் எடுத்தவன் ,கொஞ்சம் கூட வசூல் ஆகலன்னு திட்டுவீங்க. அதனால தான் நான் காசு குடுத்து டிக்கெட் வாங்குனேன். “

என்று ஞானையா சொல்ல நடத்துனரின் கண்களில் கண்ணீர் பெருகியது .

டிக்கெட் எடுக்காமல் ஏமாற்றி போவது பணம் கொடுத்து விட்டேன் .டிக்கெட் கொடு

என்று ஏமாற்றுவது .பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு நூறு ரூபாய் கொடுத்தேன். நீ பொய் சொல்ற “

என்று கொள்ளையடிக்கும் பயணிகள் என்ற போர்வையில் இருக்கும் எத்தனையோ அயோக்கியர்களுக்கு மத்தியில் ஞானையா வேறு மாதிரியாகத் தெரிந்தார்.

அடுத்தவன் மனது வருத்தப்படக்கூடாது

என்ற நல்ல எண்ணம் உள்ள ஞானையா மாதிரியான மனிதர்களும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று நினைத்த நடத்துனர் விசில் அடித்தார், ஞானையா ஒரு நிறுத்ததில் இறங்கினார்.

மறுபடியும் புறப்பட்டது அந்தப் பேருந்து. ‘டிக்கெட் …. டிக்கெட்’ என்று பேருந்தில் இருந்த பயணிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பயணச் சீட்டை கொடுத்துக் கொண்டு இருந்தார் நடத்துனர்.

” கண்டக்டர், ஒரு வள்ளுவர் கோட்டம் குடுங்க. இந்தாங்க, ஒரு முதியோருக்கான டிக்கெட்”

என்று ஒரு வயதான பயணி கேட்ட போது, அந்த நடத்துனரின் நினைவில் வந்து நிறைந்தார், ஞானையா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *