விழுப்புரம், ஏப்.17-
முதல்-அமைச்சரின் வீடு மறு கட்டுமானம் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் மறு சீரமைப்புத்திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் பி.எம்.ஜன்மன் திட்டங்களின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வரும் குடியிருப்பு வீடுகளின் கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஒவ்வொரு தவணை முடிந்தவுடன் அதுதொடர்பான ரசீதை உடனடியாக பயனாளியிடம் வழங்க வேண்டும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், முடிவுற்ற பணிகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை அவ்வப்போது சம்பந்தப்பட்ட இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதுபோல் முதல்-அமைச்சரின் வீடு மறு கட்டுமானம் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணிகள் முறையாக நடக்க அவ்வப்போது அரசு குடியிருப்பு வீடு கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்களுக்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.