கன்னியாகுமரி, ஏப்.8–
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய பாரதீய ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6 ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா பிரசார அணித் தலைவர் ஜெயப்பிரகாஷ் உரையாற்றிய போது, முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
நள்ளிரவில் கைது
இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார், ஜெயபிரகாஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று நள்ளிரவு இரணியலில் உள்ள அவரது வீட்டிற்கு நாகர்கோவில் துணை கண்காணிப்பாளர் நவீன் குமார் தலைமையில் சென்ற போலீசார், ஜெயப்பிரகாஷை கைது செய்தனர்.
நள்ளிரவில் பாரதீய ஜனதா நிர்வாகி கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.