சென்னை, செப். 15–
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்ப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மருத்துவத் துறையினர், சுகாதாரக் களப் பணியாளர்கள் முகக் கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்றடுக்கு முகக் கவசங்களை அணிய வேண்டும்.
பருவகால தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தைப் பொறுத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.