சென்னை, மார்ச் 9–
மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரை கண்டித்தும் த.வெ.க. சார்பில் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்துக் கொள்வதும், வலை உள்ளிட்ட மீன்பிடிப் பொருட்களை சேதம் செய்வது என்றும் தினம் தினம் தொல்லைக் கொடுத்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில், மாநில, மத்திய அரசு தலையீட்டின் பேரில் பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மீனவர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், போராட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மிகப்பெரிய அளவில் மீனவர்களை திரட்டி கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.