சென்னை, ஏப். 10
சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து, ரூ.68,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி எதிரொலியால், பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து, கடந்த 3-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480 என்ற அளவுக்கு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 4-ந்தேதியில் இருந்து என்ன வேகத்தில் ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் குறைய தொடங்கியது. 2 நாளில் சுமார் ரூ.2 ஆயிரம் வரை விலை குறைந்தது ஓரளவுக்கு மக்களுக்கு ஆறுதலை கொடுத்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.
நேற்று காலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்தது. தொடர்ந்து, மாலை மீண்டும் சவரனுக்கு ரூ.960 அதிகரித்து, ஒரு சவரனின் விலை ரூ. 67,280 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,480 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்றும் அதிரடியாக விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ரூ.68,480-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.8,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 2,680 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 3 அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 107க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.