நைபிடாவ், ஜூன் 22–
மியான்மர் நாட்டில் கடந்த 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை உணரப்பட்ட நில அதிர்வுகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மியான்மர் நாட்டில் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. அதன்படி, முதல் நிலநடுக்கம் நேற்றிரவு 11.56 மணியளவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்த அந்த நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2-வது நிலநடுக்கம் இன்று அதிகாலை 2.53 மணியளவில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
3 வது நிலநடுக்கம்
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு பிறகு, இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிபடுத்தியுள்ளது.
இது கடந்த 24 மணிநேரத்திற்குள் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கமாகும். இந்த 3 நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனால் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.