சிறுகதை

மாற்றம் – ராஜா செல்லமுத்து

சின்னத்துரை அரசு நிறுவனத்தில் ஒரு உயர் அதிகாரி . அவர் கட்டுப்பாட்டுக்கு எல்லோரும் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைப்பவர் .

சிடு மூஞ்சி இல்லை என்றாலும் சிடுசிடுவென பேசக்கூடியவர். உயர்ந்த இடத்தில் இருந்ததால் அவருக்கு இயல்பாகவே அதிகாரத்தாெனி அவர் உடம்பில் ஒட்டிக் கொண்டது . உதட்டிலிருந்து வரும் வார்த்தைகள் கூட கீழ இறங்காமல் உயரத்திலேயே நின்றன.

யார் அவரைப் பார்க்க வந்தாலும் நிற்க வைத்து தான் பேசுவார். யாரையும் உட்கார வைத்துப் பேச மாட்டார். தான் என்கின்ற அகங்காரம் அவருக்கு இருந்ததால் அந்த அரசு அலுவலகத்தில் அவரை யாரும் மதிக்க மாட்டார்கள். அவரைக் கண்டு பயப்படுவது மரியாதையில் அல்ல. இவரைப் பகைத்துக் கொண்டால் நாளை நம் வேலைக்குப் பங்கு வந்து விடலாம் என்ற பயத்தில் தான் அவர்கள் ஒதுங்கி செல்வார்கள். மற்றபடி சின்னத்துரைக்கு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மத்தியில் மதிப்பு குறைவு.

இப்படியாய் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். பணியாளர்கள் கண்டிப்பாக இவருக்கு ஒரு நாள் இறைவன் பாடம் கற்பிப்பான் என்று நினைத்துக் கொண்டார்கள். இருந்தாலும் உயர்ந்த இடத்தில் இருப்பவரை என்ன செய்ய முடியும்? அவர் வைத்தது தான் சட்டம் .அவருடைய உயரத்திற்கு அவருடைய தகுதிக்கு தகுதியான நபர்களை அமர வைத்து பேசுகிறார். நம் போன்ற கடைநிலை ஊழியர்களை அவரை எதிர்நோக்கி வருபவர்களை எல்லாம் நிற்க வைத்துத் தான் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு அந்த அலுவலகத்தில் வெளிப்படையாகவே பேசப்பட்டன.

ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத சின்னத்துரை தான் உயர்ந்த பதவியில் இருப்பவன் என்ற அகங்காரத்தோடு தான் இருந்து வந்தார்.

ஆனால் அவருக்குக் கிடைக்கும் மரியாதைகள் குறைந்தால் அவருக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வரும். அப்படித்தானே அடுத்தவர்களுக்கும் இருக்கும் என்று ஊழியர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

ஒரு நாள் சின்னத்துரையை அவருக்கு மேலே இருக்கும் அதிகாரி பணி நிமித்தமாய் அழைத்திருந்தார்.

தன்னுடைய அலுவலகத்தில் அத்தனை பேரையும் தரக்குறைவாக நடத்தும் சின்னத்துரை தன் மேல் அதிகாரியை பார்த்ததும் பூனை போல் பவ்யமாக சென்றார்.

அந்த மேலதிகாரி மட்டும் அமர்ந்திருந்தார். ஏற்கனவே இரண்டு பேர் அங்கு நின்று கொண்டிருந்தார்கள். உடனடியாக நின்று கொண்டிருந்த அந்த இரண்டு பேருக்கும் இருக்கைகள் வந்தன. அந்த இருவரும் அமர்ந்தார்கள். நின்று கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஏன் நாம் ஏற்கனவே அமர்ந்திருந்த நாற்காலியை எடுத்துப் போகச் சொல்லி திரும்பவும் வந்து போட்டு அதில் அமர சொல்கிறார்? என்று அந்த ஒரே உயர் அதிகாரியை பற்றி வந்தவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள் .

சின்னத்துரை நின்று கொண்டே இருந்தார்.

உயர் அதிகாரிக்கு வணக்கம் சொல்லிவிட்டு எதற்காக அழைத்தாரோ அதை நிற்க வைத்து பேசிக்கொண்டு இருந்தார். அமர்ந்திருந்தவர்களுக்கு காபி வந்தது.

சின்னத்துரைக்கு காபி வரவில்லை. அந்த மேலதிகாரி சின்னத்துரையுடன் பேசிவிட்டு அனுப்பிவிட்டார் .

சின்னத்துரைக்கு மிகவும் அவமானமாகப் போனது .

என்ன ஒரு அசட்டுத்தனம்? என்ன ஒரு வேறுபாடு . நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம்? ஆனால் நமக்கு மேலே இருக்கின்ற இருக்கும் ஒரே காரணத்திற்காக நம்மை நிற்க வைத்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டாரே இந்த பெரிய மனிதர். இவரை சும்மா விடக்கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டார் சின்னதுரை.

ஒரு வாரம் கழித்து மறுபடியும் அதே உயரதிகாரி சின்னத்துரையை அழைத்தார்.

இப்போதும் சின்னதுரையுடன் இன்னொரு நபரும் அவருடன் கூடவே வந்தார். வந்த நபரை இருக்கையில் அமர வைத்து அப்போதும் சின்னதுரையை அமரச் சொல்லாமல் வந்த வேலைக்கான காரணத்தை அந்த உயர் அதிகாரி நிற்க வைத்து சொல்லிக் கொண்டிருந்தார் .

அமர்ந்திருந்தவருக்கு காபி வந்தது அவர் காபியைக் குடித்துக் கொண்டிருந்தார்.

வேலையை முடித்துவிட்டு சின்னத்துரை அனுப்பினார் அந்த உயர் அதிகாரி.

அப்போதும் சின்னத்துரைக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. என்ன இவர் நம்மை ஏதும் கிண்டல் செய்கிறாரா ? என்று நினைத்துக் கொஞ்சம் கோபம் கொப்பளிக்க வெளியே வந்தார்.

இதை அலுவலகத்தில் காட்டிக் கொள்ளவில்லை .காட்டினால் நமக்கு அவமானம் என்று நினைத்துக் கொண்டார் சின்னதுரை.

இரண்டு மூன்று வாரங்கள் கழித்து மறுபடியும் மேலதிகாரியிடம் இருந்து சின்னத்துரைக்கு அழைப்பு வந்தது .

எப்பாேதும் போல் அவரை நிற்க வைத்தே பேசிக் கொண்டிருந்தார் உயர் அதிகாரி.

அப்போது சின்னத்துரையின் முகத்தில் லேசாக கோபம் வந்ததை கண்டுபிடித்த அந்த உயர் அதிகாரி அப்போது வரை அமர்ந்திருந்தவர் எழுந்து சின்னதுரையின் தோளைத் தொட்டார்.

இதை எதிர்பார்க்காத சின்னத்துரை

சார் என்றார்

என்ன சின்னத்துரை. ரெண்டு மூணு தடவை வந்தீங்க. நான் உங்கள நிக்க வச்சே பேசினேன். உங்களுடைய மனசு எப்படி இருந்தது . நான் உயர் அதிகாரி எனக்கு கீழ வேல பாத்திட்டு இருக்கீங்க. அதுக்காக நான் உங்களை நிக்க வச்சு பேசும்போது உங்களுடைய மனசு உங்களுடைய கௌரவம் எவ்வளவு வருத்தப்பட்டது என்று அந்த உயர் அதிகாரி சொன்னபோது சின்னத் துரையின் முகம் எதையோ நினைத்தது.

அது மாதிரித் தானே உங்களை தேடி வர்றவங்கள யாரையுமே நீங்க உட்கார வைக்கல. அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் இத உங்களுக்கு புரிய வைக்கத் தான் இப்பிடி நடந்துகிட்டேன் . மத்தபடி உங்கள அவமானப்படுத்தனும்ங்கிற நோக்கம் எனக்கு இல்ல.

இனிமேலாவது உங்களப் பாக்க வர்ற அலுவலர்களா இருக்கட்டும் ; மக்களா இருக்கட்டும். எல்லாரையும் ஒக்கார வச்சு மரியாதை குடுத்து பேசுங்க. அதுதான் நீங்க மனுசனா பிறந்ததற்கு அடையாளம் என்று முகத்தில் அறைந்தது போல் சொன்னார் மேல் அதிகாரி. அதுவரை தான் செய்தது நியாயம் என்று நினைத்துக் கொண்டிருந்த சின்னதுரை தான் செய்த தவற்றை உணர்ந்தார்.

மறுநாள் அலுவலகம் வந்தார்.

யார் அவரைத் தேடி வந்தாலும் அவர்களை அமர வைத்து, காபி அல்லது குறைந்தபட்சம் தண்ணீராவது கொடுத்து, அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்து அனுப்பினார் சின்னதுரை.

அவரின் இந்த மாற்றத்தை கண்டு அலுவலக ஊழியர்களும் அவரைத் தேடி வரும் மக்களும் வியப்படைந்தார்கள்.

அவர் எதற்காக இப்படி மாறினார் என்ற விஷயத்தை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை சின்னத்துரை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *