செய்திகள்

மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என நள்ளிரவில் போலீஸ் மிரட்டல் கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு

Makkal Kural Official

ஊட்டி, ஏப். 25–

பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் ஊட்டி ராஜ்பவனில் இன்று தொடங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

மாநாட்டில் பங்கேற்க கூடாது என தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர் என கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பின் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் மாநாட்டை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் செய்யும் அதிகாரமும் இனி தமிழக அரசுக்கே உள்ளது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனால் கவர்னரின் அதிகாரம் பறிக்கப்பட்டது. எனினும் அதனையும் மீறி இம்முறை துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் நடத்தப்படும் என கவர்னர் மாளிகை அறிவித்தது.

இதனிடையே அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்பட்ட நிலையில் 4வது ஆண்டாக இன்று ஊட்டி ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு இன்று துவங்கியது. இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். இதற்காக டெல்லியில் இருந்து கோவை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் துணை ஜனாதிபதி உதகை வந்தார்.

49 பல்கலைக்கழகத்துக்கு அழைப்பு

மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழகத்தில் உள்ள மாநில, தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் என 49 பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 32 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளதாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. மதுரை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மட்டும் பங்கேற்றுள்ளார். பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் இயக்குநர்கள், டீன் மற்றும் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திருநெல்வேலியிலிருந்து வந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பாதி வழியில் முடிவை மாற்றிக் கொண்டு திரும்பியுள்ளார்.

மேலும் ஞாயிறு அன்று துணை ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு பணிகளில் இருப்பதால், மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:–

தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்தவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. நேரில் சென்று நிறைய பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பிறகே, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலைமை மோசமாக உள்ளது. மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர். இதனால் தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

துணைவேந்தர்களின் வீட்டின் கதவை நள்ளிரவில் தட்டி, ‘மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது’ என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மாநில பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படவில்லை. தமிழகத்தில் கல்வி தரம் மோசமாக உள்ளது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை. சில துணைவேந்தர்கள் ஊட்டிக்கு வந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

மாநாட்டுக்கு எதிராக

போராட்டம்

கவர்னரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப் பின்னரும் கவர்னர், துணைவேந்தர் மாநாடு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று கூறி கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். அரசியல் மாண்புகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு கல்விக்கு ஒதுக்கவேண்டிய ரூ. 2,152 கோடியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை சாஸ்திரி பவன் முன்பு மாா்க்சிஸ்ட் கட்சி மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறது. அதேபோல கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டத் தலைநகரகங்களிலும் இன்று கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதகையில் கவர்னருக்கு எதிராக திராவிடர் தமிழர் கட்சியினர் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *