சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு :
சென்னை, ஏப்.26-
மாதந்தோறும் ரூ.200 கட்டணத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
சட்டசபையில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்கள் சேவை துறை மானியக்கோரிக்கை யின்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார்.
எங்களது துறை சார்பாக பொதுமக்களுக்கு, சுமார் 300 இடங்களில் இலவச வைபை சேவை அளித்து கொண்டு இருக்கிறோம். அம்மா உணவகம், பஸ் நிலையம் என சென்னையில் மட்டும் 1,869 இடங்களிலும், ஆவடி, தாம்பரம், கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் 700 இடங்களிலும் இந்த சேவை வழங்குகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 8 ஆயிரம் இ-சேவை மையங்கள் இருந்தன. இப்போது அது 25 ஆயிரம் ஆகி இருக்கிறது. கடந்தாண்டு மட்டும் சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர் அரசு அலுவலகங்களுக்கு வராமலே இ-சேவை மையங்கள் மூலமே அரசின் சேவையை பெற்று இருக்கிறார்கள்.
தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் மூலம் அதிவேக இணையதள சேவை வழங்குவதற்கு 57 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைபர் கேபிள் அமைத்து 15 ஆயிரத்து 525 கிராமங்களுக்கு கொண்டு சென்று இருக்கிறாம். கடந்த ஆட்சியில் இந்த பணிகள் தாமதமாக நடந்தது. இப்போது அதனை வேகப்படுத்தி 93 சதவீத பணிகள் முடித்து இருக்கிறோம். இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம். இப்போது வரை சுமார் 2 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு இணையதள சேவையை இந்த நெட்வொர்க் மூலம் வழங்கி வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இந்த சேவையை முழுமையாக அளித்த பிறகு, அதனை படிப்படியாக பொதுமக்களுக்கு அளிக்கும் முயற்சியை மேற்கொண்டு இருக்கிறோம்.
கேபிளுக்கு இருப்பது போல இண்டர்நெட் ஆப்ரேட்டர்கள் மூலம் அதிவேக பைபர் இணையதள சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். கூடியவிரைவில் தனிநபர் வீடுகளுக்கு சுமார் 100 எம்.பி.பி.எஸ். வேகத்தில் ஒரு மாதத்திற்கு ரூ.200 கட்டணத்தில் வழங்கப்படும்.
தமிழக அரசாங்கம், கேபிள் டி.வி. நடத்தக்கூடாது என்று மத்திய அரசு நமக்கு பல முறை கடிதம் அனுப்பி உள்ளது. அங்கே தமிழ்நாட்டை சேர்ந்த இணை அமைச்சர் முருகன் அந்தத் துறையில் இருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இது பொதுமக்களுக்கு பயனளிக்கும் ஒரு சேவை. இதை நீங்கள் ஏதோ ஒரு சட்டத்தைக் கூறி நிறுத்தக்கூடாது என்ற வாதத்தை வைத்து, இதுவரையில் அவர்களுடைய கடிதங்களை தாண்டிதான் அரசு கேபிள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பஸ் டிக்கெட்டுகளை இ-சேவை மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிக்க இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.