தி.மு.க. ஆட்சி மீது கவர்னரிடம் விரைவில் புகார்
சென்னை, டிச.28-
மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகம் உலகம் எங்கிலும் அறியும் பல்கலைக்கழகமாக விளங்கி வருகிறது. கடந்த 23-ந்தேதி, இரவு 7.45 மணிக்கு ஞானசேகரன் என்பவர், அந்த பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
பாலியல் சீண்டல் நடைபெற்ற நேரத்தில், ஞானசேகரன் சார், சார் என்று ஒருவரிடம் பேசியிருப்பதாக மாணவி புகார் தெரிவித்துள்ளார். அந்த சார் யார்? என்பதை உயர் அதிகாரி தெரிவிக்கவில்லை. இதை மறைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் 70 கண்காணிப்பு கேமராக்களில், 50 கண்காணிப்பு கேமராக்கள்தான் இயங்குவதாக சொல்கிறார்கள் மற்றவை ஏன் இயங்கவில்லை?.
ஞானசேகர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் எப்படி, தங்கு தடையின்றி அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடமாட முடியும்?. இதை எப்படி அனுமதித்தார்கள்? சரித்திர பதிவேடு குற்றவாளிகள், பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தால், இதுபோன்ற நிலைதான் ஏற்படும்.
போலீஸ் கமிஷனர், பல்கலைக்கழகத்தின் ‘போஷ்’ செல்லில் இருந்து 100-க்கு(போலீஸ் கட்டுப்பாட்டு எண்) புகார் வந்தவுடன் வழக்குபதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், உயர்கல்வித்துறை அமைச்சரோ, பல்கலைக்கழகத்தின் ‘போஷ்’ பிரிவுக்கு 100 சதவீதம் புகார் வரவில்லை. நேரடியாக போலீஸ் நிலையத்தில்தான் மாணவி புகார் கொடுத்தார் என்று முரண்பட்ட கருத்தை சொல்கிறார். எனவே உண்மை நிலை வெளியே வர வேண்டும் என்றால் இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தப்பிக்க வைக்க முயற்சி?
இந்த வழக்கில் ஆளும் கட்சியை சேர்ந்த நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஞானசேகரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்றும் தெரிகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது, ஆளும் கட்சியை சேர்ந்தவரை தப்பிக்க வைக்க, காவல்துறை செயல்படுகிறதோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.
பல அமைச்சர்களுடன் ஞானசேகரன் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதற்கு, பல்வேறு காரணங்களை அமைச்சர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும், தி.மு.க.வில் அவர் பொறுப்பில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதை மறைப்பதற்கு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். இந்த வழக்கு பதிவானவுடன் அவர் பெயர் இடம் பெற்ற விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், நோட்டீசுகள் கிழித்து எறியப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
கொலை பட்டியல்
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தொடர்ந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். குற்றவாளிகள் கொஞ்சம் கூட அச்சப்படாமல் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். போலீசார் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மாணவி பாலியல் வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியே வந்துள்ளது பற்றி போலீஸ் கமிஷனர் சொல்லி இருக்கும் தகவல்கள் உண்மை அல்ல. பத்திரிகைகளில் தங்கம், வெள்ளி விலை எவ்வளவு என்றுதான் செய்திகள் வரும். தற்போது கொலைபட்டியல்தான் வெளியே வருகிறது.
கவர்னருடன் விரைவில் சந்திப்பு
தமிழக கவர்னரை 2 முறை சந்தித்து தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழல்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து தெளிவாக சொல்லிவிட்டோம். தற்போது எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. எந்தெந்த துறைகளில் முறைகேடு நடைபெற்று இருக்கிறது என்ற பட்டியலை தயாரித்து, பாலியல் வன்கொடுமை, கொலை-கொள்ளை, திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த தவறிய இந்த விடியா தி.மு.க. அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக கவர்னரை விரைவில் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம், காலணி அணிய மாட்டேன் என்ற சபதம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கருத்து கேட்க முயன்ற போது, இதை நீங்கள் அவரிடமே கேளுங்கள் என்று பதிலளித்தார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், பா.வளர்மதி, டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, பென்ஜமின் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
30ந்தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அந்த போராட்டம் வேறு தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணியளவில் சென்னை மாவட்டம் நீங்கலாக கட்சி அமைப்புரீதியாக செயல்படும் 81 மாவட்டங்களில் நடைபெறும்’ என்று தெரிவித்தார்.