எடப்பாடி கடும் கண்டனம்
சென்னை, டிச.9-
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்படுத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-–
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10-–க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தி.மு.க. அரசின் போலீஸ் துறை வழக்கம் போல மிகவும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு புகார் அளித்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டதால், இக்குற்றம் தொடர்ந்து நடைபெற்றதாக தகவல்கள் வருகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் வந்தால், அதன் தீவிரத்தன்மை உணர்ந்து, முறையாக விசாரிக்க வேண்டும் என்பது தி.மு.க. அரசின் போலீஸ் துறைக்கு தெரியாதா?. பெண்களுக்கு, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படும் நிலையை உருவாக்கியதோடு மட்டும் அல்லாமல், பெண்களுக்கு எதிரான வழக்குகளை மெத்தனப் போக்குடன் கையாளும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம். இவ்வழக்கில் தொடர்புள்ள கயவர்கள் அனைவருக்கும் கடுமையான சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்கவும், அத்தகைய புகார்கள் மீது தாமதம் இன்றி தீவிர விசாரணை மேற்கொள்ளவும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.