சென்னை, டிச.2–
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீரமைத்திட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
பெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தைத் தொடர்பு கொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் சு. முத்துசாமியையும், தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் ஆர். ராஜேந்திரனையும் நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன்.
இம்மாவட்டங்களின் கலெக்டர்களுடனும் தொடர்ந்து பேசி கள நிலவரத்தைக் கண்காணித்து வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.