சென்னை, பிப்.21-
சென்னையில் நடந்த பொருளாதார ஆலோசனைக்குழு கூட்டத்தில், ‘இந்திய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் பொருளாதார ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மை செயலாளர் த.உதயச்சந்திரன் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வழங்கும் திட்டம் அனைவராலும் பாராட்டப்பாட்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால், இடைநிற்றல் குறைந்து மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை உயர்ந்திருக்கிறது.
நான் முதல்வன் திட்டம், சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது.
இந்திய அளவில் மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்களுக்குப் பயன் அளிக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகையையும், ஊட்டச்சத்து நிலையையும், கற்றல் திறனையும் மேம்படுத்தியிருக்கிறது. விடியல் பயணத் திட்டம் பெண்களின் பணிச்சூழல் பங்களிப்பை மேம்படுத்தி, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது.
ஒரு டிரில்லியன் டாலர்
பொருளாதாரம்
மருத்துவத் துறையில் செயல்படுத்தப்பட்டிருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டமும், பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் இல்லம் தேடி கல்வி திட்டமும், தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது.
இப்படி பல்வேறு சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே வேளையில், தமிழ்நாட்டின் பொருளாதாரய வளர்ச்சியையும் வேகப்படுத்தி, 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.82 லட்சம் கோடி) பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறோம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
பல ஆண்டு காலமாக, தமிழ்நாட்டில் சிறந்து விளங்கும் மோட்டார் வாகன உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தோல்பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகள் மட்டுமல்லாமல், தோல் அல்லாத காலணி உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைப் பொருட்கள் உற்பத்தி, உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை புதிய வளர்ச்சித் துறைகளாக முன்னிறுத்தி, இந்தத் துறைகளிலும், இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.
இப்படிப்பட்ட தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
சமீபத்தில் தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களின் நிதிப்பகிர்வு குறித்த நமது நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி, மத்திய அரசின் 16-வது நிதிக்குழுவிடம் கோரிக்கை மனுவை அளித்தோம். ஒரு முற்போக்கான அணுகுமுறையை இந்த நிதி ஆணையம் கடைபிடிக்கும் என்று எதிர்நோக்கியுள்ளோம்.
மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். இத்தகைய சூழலில், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான உங்களின் பரிந்துரைகளையும், ஆலோசனை களையும் நான் எதிர்நோக்கியுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.