செய்திகள்

மருதமலை கோயிலில் ஆசியாவிலேயே மிக உயர முருகன் சிலை அமைக்கப்படும்: சேகர்பாபு தகவல்

Makkal Kural Official

சென்னை, ஜன 28–

ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக மருதமலை கோயிலில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். மருதமலை, சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது என்றார்.

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (27–ந் தேதி) கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–

தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகன் திருக்கோயில்களில் அதிக எண்ணிக்கையில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெருந்திட்ட வரைவின்கீழ் முதற்கட்டமாக திருச்செந்தூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டிலும், பழனியில் ரூ.99 கோடி மதிப்பீட்டிலும், திருத்தணி ரூ.183 கோடி மதிப்பீட்டிலும், மருதமலையில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டிலும், சிறுவாபுரியில் ரூ.16 கோடி மதிப்பீட்டிலும், குமாரவயலூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டிலும், உதகை காந்தலில் ரூ.16 கோடி மதிப்பீட்டிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முருகன் திருக்கோயில்கள் மூத்த குடிமக்கள் அறுபடை வீடுகளுக்கு 2 ஆண்டுகளாக கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

முதலமைச்சரின் அனுமதியோடு தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மருதமலை திருக்கோயில் அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன முருகன் சிலையை அமைக்க உள்ளோம். இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக அமையும். இதற்கான ஆய்வு பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில்

10–ம் தேதி குடமுழுக்கு

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பிப்ரவரி 10–ம் தேதி அன்னை தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது. இத்திருக்கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் வருகின்ற 31-ந் தேதி அகற்றுவதற்கு காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியுள்ளோம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்திட வேண்டும். வெள்ளியங்கிரி கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வெள்ளியங்கிரி மலையில் ரூ.21 கோடி செலவில் பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த அரசு பொறுப்பேற்றபின், 11 கோயில்களில் நாள்முழுவதும் அன்னதானத்தையும், 17 கோயில்களில் ஒருவேளை அன்னதானத்தையும் விரிவுப்படுத்தியுள்ளோம். கோயில்களின் திருப்பணிகளுக்கு உபயதாரர்கள் இதுவரை சுமார் ரூ.1,200 கோடி நிதி வழங்கியுள்ளனர். இது தமிழக அரசின் மீதும், இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் உபயதாரர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், கோயம்புத்தூர் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், வருவாய் அலுவலர் எம்.ஷர்மிளா, துணை ஆணையர்கள் ஆர். செந்தில் குமார், கே.விமலா, அறங்காவலர் குழுத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *