புதுடெல்லி, ஏப்.26–
அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்.
பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு உள்ளார்.
இதற்காக துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவுடன் சமீபத்தில் டெல்லி சென்று இருந்தார். அங்கு அவர் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கொல்கத்தா சென்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மற்றும் லக்னோ சென்று சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்தார்.
அவர்களைத் தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரை சந்திக்க இருக்கிறார்.
இது குறித்து ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “ஒடிசா மற்றும் தெலுங்கானா முதல்வர்களை நிதிஷ் குமார் விரைவில் சந்திக்கிறார்” என்றார்.