லக்னோ, செப். 19–
உத்திரப் பிரதேசத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருட வந்ததாக 7 கூறி மரத்தில் கட்டி வைத்து, பழுக்க காய்ச்சிய கம்பியில் சூடு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரி மாவட்டத்தில் கரவுளி என்ற கிராமத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நடுத்தர வயது பெண், இரவு நேரத்தில் கிராமத்திற்குள் வந்தார். அவரைப் பார்த்த கிராம மக்கள் திருட வந்ததாக எண்ணி, மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அந்த சமயத்தில் தன் மனைவியின் கட்டை அவிழ்க்க வந்த கணவனையும் அவர்கள் சேர்த்து கட்டி வைத்தனர். அதோடு அந்த பெண்ணின் கால்களில் கம்பியை பழுக்க காய்ச்சி சூடு போட்டனர்.
கொடுமை செய்த கிராமம்
அந்த கணவன் தன் மனைவி மனநல பாதிக்கப்பட்டவர் என்று கூறியதை அவர்கள் கொஞ்சமும் கேட்கவில்லை. அதோடு அந்தப் பெண்ணை கட்டி போட்டது மட்டுமில்லாமல் சிலர் அத்துமீறி தவறாக நடந்து கொள்ளவும் முயற்சி செய்துள்ளனர். மேலும் இது குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.