தஞ்சாவூர், செப். 22–
கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான கருணகொல்லைத் தெருவை சேர்ந்த சௌந்தரராஜ் (வயது48), பாலக்கரை பெருமாண்டி தெருவை சேர்ந்த பாலகுரு(வயது 43) 2 பேரும் மேலக்காவிரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு நேற்று மாலை வந்தனர். காவிரி படிக்கட்டில் அமர்ந்து மதுவில் சானிடைசர் கலந்து குடித்தாக கூறப்படுகிறது.
2 பேரும் பலி
இந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் காவிரி படித்துறை பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு 2 பேர் மயங்கிய நிலையில் கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்கள் இறந்த நிலையில் கிடந்ததை அடுத்து, உடல்களை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்கள் மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததால் உயிரிழந்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.