செய்திகள்

மதுரை டங்க்ஸ்டன் போராட்டம்: பொதுமக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் கோரிக்கை பரிசீலிக்கப்படும்

Makkal Kural Official

சென்னை, ஜன.11-–

மதுரையில் டங்ஸ்டன் போராட்டம் தொடர்பாக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பது தொடர்பாக கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.), வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கையை அண்ணா தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.

யூ.ஜி.சி-ன் புதிய வரைவு அறிக்கை, மாநில பல்கலைக்கழகத்தின் உரிமையை பறிப்பது மற்றும் அதன் தன்னாட்சித் தன்மையை அபகரிக்கும் அபாயமும் உள்ளது. மாநில அரசின் உரிமையைப் பறிக்கிற விதமாக, துணை வேந்தரை நியமிக்கும் தேர்தல் குழுவை கவர்னர் தீர்மானிப்பார் என்ற வரைவு அறிக்கையை அண்ணா தி.மு.க. எதிர்க்கிறது. இது குறித்த அரசின் தீர்மானத்தை நாங்கள் ஆதரித்திருக்கிறோம். அந்த வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

டங்ஸ்டன் தொடர்பாக மதுரை மேலூரில் பல்வேறு கிராம மக்கள் தங்களுடைய நிலம் பறிபோய்விடு மோ, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்துகிற விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,- டங்க்ஸ்டன் விவகாரத்தைப் பொறுத்தவரையில், அங்குள்ள பொதுமக்கள், பேரணிகள் நடத்தி, அதனால் அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டுமென்று ஒரு கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் வைத்திருக்கிறார். அது நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *