சென்னை, பிப். 5–
மதுரை- – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகி அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் இருந்து சென்னைக்கு வாரம் இருமுறை சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.22624) மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னையில் இருந்து (வ.எண்.22623) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து இரவு 8.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் மார்ச் மாதம் 21-ந் தேதி வரை இந்த ரெயிலில் தற்காலிகமாக 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 2 பொதுப்பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். அதன்படி, இந்த ரெயிலில் நாளை முதல் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியும், 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 4 பொதுப்பெட்டிகளும், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.