செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்

Makkal Kural Official

பச்சை பட்டு உடுத்தி இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை, மே 12–

தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இன்று அதிகாலை 5.59 மணிக்கு கள்ளழகர் இறங்கினார். அப்பொது வைகை ஆறே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு ஆற்றிலும் ஆற்றில் இரு கரை நெடுகிலும், மேம்பாலத்தில் அலை கடலென திரண்டிருந்த மக்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் கள்ளழகரை தரிசித்தனர்.

சித்திரை திருவிழாவையொட்டி அழகர் மலையில் வீற்றிருக்கும் சுந்தராஜபெருமாள் அங்கிருந்து கடந்த 8 ந் தேதி தோளுக்கினியான் வேடத்தில் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து நேற்றிரவு 9 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் பிரசன்னமானார். அங்கு வந்த அழகரை பக்தர்கள் நாட்டுச்சர்க்கரை நிரப்பப்பட்ட செம்பில் சூடம் ஏற்றி வரவேற்றனர்.இரவு சிறப்பு அலங்காரத்திற்கு பின்பு கள்ளழருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் தந்த கள்ளழகர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆறு நோக்கி புறப்பட்டனர். அவருக்கு முன்னதாகவே பக்தர்கள் தல்லாகுளம் முதல் வைகை ஆற்றுப் பாலத்தையும் தாண்டி சிம்மக்கல் வரை அணிவகுத்து நின்றனர். தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்த கள்ளழகர் அங்கு பாரம்பரியமிக்க ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். தங்கை மீனாட்சி சுந்தரேசுவர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த அழகர் வந்தார். அதன் பிறகு பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் புறப்பட்டார். சரியாக காலை 5.55 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா” “கோவிந்தா” என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

பச்சை பட்டு உடுத்தி

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது எந்த நிறத்தில் பட்டுத் துணி உடுத்தி வருகிறாரோ அதற்கேற்ப இந்த ஆண்டின் பலா பலன்கள் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த ஆண்டு பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கியிருப்பதால் நாட்டில் நல்ல மழை பெய்யும்; நாட்டில் பசுமையும் செழிப்பும் ஏற்படும் என பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆற்றில் இறங்கிய கள்ளழகரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். பின்னர் வீரராகவப் பெருமாளை கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் 3 முறை சுற்றி வந்தார் . அப்போது வீரராகவப் பெருமாள் சுவாமி, தங்கை மீனாட்சிக்கு திருமணம் நடந்ததை கள்ளழகருக்கு தெரிவித்த காட்சி நடைபெற்றது. இதைக் கேட்ட கள்ளழகர், நான் இல்லாமல் தங்கைக்கு திருமணமா என்று கோபமாக அந்த மண்டகப்படியிலிருந்து கிளம்பி ஆற்றின் ஓரத்தில் இருந்த ராமராயர் மண்டபத்துக்கு 7.30 மணி அளவில் எழுந்தருளினார். இதையடுத்து கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் ஆற்று ஓரத்தில் இருந்த ராமராயர் மண்டபத்திற்கு சென்றார். கள்ளழகர் எழுந்தருளிய போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர் மீதும் அழகரை தூக்கி வந்த சீர்பாத தூக்கிகள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தோலால் செய்யப்பட்ட பையில் தண்ணீரை நிரப்பி அதைத் தோளில் போட்டுக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தபடியே சென்றனர். தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமியை தூக்கிச்செல்லும் சீர்பாத தூக்கிகளுக்கும் உடன் செல்லும் பக்தர்களுக்கும் கால் சுடாமல் இருக்க வேண்டுதலின் பேரில் அவர்களின் பாதங்களில் சில பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடியே சென்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *