மதுரை, அக். 27–
இனி வரும் காலங்களில் மதுரையில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
நேற்று மதுரையில் பெய்த மழையின் காரணமாக குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைச்சர்கள் கே.என் நேரு, மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.என் நேரு கூறியதாவது:–
முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட அமைச்சர்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கால்வாயில் அதிகமாக நீர் வருவதால் அதை அகலப்படுத்தி கரையை உயர்த்த வேண்டும். தற்போது கால்வாயின் நீரை வெளியேற்ற புது வாய்க்கால் தோண்டப்பட்டு வருகிறது.
இனி மழை பெய்தாலும் மதுரை பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். மாவட்ட நிர்வாகம் விரைவாக செயல்பட்டதால்தான் மழை நீரை அகற்ற முடிந்தது. மாவட்ட ஆட்சியரின் கருத்துருவை பெற்று மழை நீர் வடிகால் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரையில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.
மழை நீரை கடத்தும் பணிகள் நாளை காலை 10 மணிக்குள் நிறைவடையும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.