மதுரை, மார்ச் 24–
மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
விருதுநகர் மாவட்டம் முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராகப் பணிபுரிந்து வந்தார்.
சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் மனைவி பாண்டிச்செல்வியுடன் மலையரசன் திரும்பியபோது மானாமதுரை அருகே கார் மோதிய விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த பாண்டிச்செல்வி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதனால் விடுமுறையில் இருந்த மலையரசன் கடந்த 18–ந்தேதி மனைவியின் மருத்துவ ஆவணங்களை வாங்கச் செல்வதாகக் கூறி விட்டு, மதுரைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மதுரை சுற்றுச் சாலையில் ஈச்சனேரி கண்மாய் அருகே எரிந்த நிலையில் மலையரசன் உடல் மறுநாள் (19–ந்தேதி) இரவு மீட்கப்பட்டது.
மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பெருங்குடி போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இந்த நிலையில் மலையரசன் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவரான மூவேந்திரன் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன் பேரில் மூவேந்தரனை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் சப்–இன்ஸ்பெக்டர் மாரி கண்ணனை வெட்ட முயன்று, தப்பிக்க
முயற்சிக்கும்போது துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பிடித்தனர்.காயமடைந்த மூவேந்திரனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர்.