மதுரை, ஜன. 3–
மதுரையில் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற, குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ள னர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நிய மித்து ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. அதேபோல் தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று யார் அந்த சார்? என்ற கேள்விக்கு விடை காண போராட்டங்கள் நடத்தப்படுகிறது.மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கோஷமும் வலுத்துள்ளது. எனவே பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து சட்டம்-ஒழுங்கை பாது காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க. போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
பா.ஜ.க. மகளிரணி சார்பில்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டி பா.ஜ.க. மகளிரணி சார்பில் நீதி யாத்திரை பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சியை செய்வதை கண்டித்தும், தமிழ்நாடு பா.ஜ.க. மகளி ரணி சார்பில் மாநில தலைவர் உமாரதி தலைமையில் மதுரையில் இருந்து சென்னை வரை பேரணி நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திலகர் திடல் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தபோதிலும் தடையை மீறி பேரணி நடைபெறும் என்று சென்னையில் மகளிரணி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
தீச்சட்டி, சிலம்பு ஏந்தி போராட்டம்
முன்னதாக அங்குள்ள செல்லத்தம்மன் கோவிலில் மதுரை மாவட்ட பா.ஜ.க. மகளிரணி தலைவி ஓம்சக்தி தனலட்சுமி தலைமையில் மகளிரணியை சேர்ந்த 7 பேர் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். மேலும் கண்ணகி நீதி கேட்டு போராடியபோது அம்மனுக்கு மிளகாய் வற்றல் அரைத்து பூசிய நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் மகளிர் அணியினர் மிளகாய் வற்றல் அரைத்தனர். அதேபோல் நிர்வாகிகள் கண்ணகி நீதி கேட்டு போராடியை நினைவூட்டும் வகையில் கையில் சிலம்பு ஏந்தி வந்தனர். தொடர்ந்து டிராக்டரில் தொடங்கிய பேரணிக்கு மாநில மகளிரணி தலைவர் உமாரதி ராஜன் தலைமை தாங்கினார். பேரணியில் கலந்துகொள்ள நடிகை குஷ்பு வந்திருந்தார். பின்னர் போலீசார் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற, குஷ்பு உள்ளிட்ட பா.ஜக. மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர். அப்போது பா.ஜ.க,வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
குஷ்பூ கூறுகையில், ‘இந்த பேரணிக்கு அனுமதி கொடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. திமுக ஆட்சிக்கு எதிராக, திமுகவின் தவறான செயல்களை எதிர்த்து யார் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் அனுமதி கொடுக்கப்படுவதில்லை. அதற்கு காரணம் எதைப் பேசினாலும் உண்மையை மட்டும் தான் பேசுவோம் என திமுகவிற்கும் நன்றாகவே தெரியும். எனவே அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். என் மண்ணில், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை இன்று மக்கள் காது கொடுத்துக் கேட்கிறார்கள். நாங்கள் சொல்வதை கேட்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்’ என்றார்.
பா.ஜ.க, மகளிர் அணியினர் கவர்னரை சந்தித்து தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து புகார் மனு அளிக்க உள்ளனர். முன்னதாக பேரணி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் பகுதியில் தடுப்புகள் போடப்பட்டு ஏராளமான பெண் போலீசார் குவிக்கப்பட்டனர்.