உலகில் மதம் சாராதோர் எண்ணிக்கை 14 சதமாக அதிகரிப்பு
சென்னை, ஏப். 22–
உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளை விட்டு வெளியேறி வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் மத நம்பிக்கையை கைவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 36 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கிறிஸ்தவம் மற்றும் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் மதத்தை விட்டு வெளியேறுவது தெரிய வந்துள்ளது.
தென் கொரியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தாங்கள் பிறந்த மதத்தை தற்போது பின்பற்றுவதில்லை என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக கிழக்கு ஆசியா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் மதத்தை விட்டு வெளியேறும் போக்கு அதிகமாக காணப்படுகிறது. தங்களை ‘நாத்திகர்கள்’, ‘மத நம்பிக்கையற்றவர்கள், அல்லது ‘எந்த மதமும் இல்லை’ என்று அடையாளப்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது.
மதத்தை விட்டு வெளியேறுவோர்
தென் கொரியாவில் 50 சதவீதத்தினரும், ஸ்பெயினில் 40 சதவீதத்தினரும், கனடா, சுவீடனில் முறையே 38, 37 சதவீதத்தினரும் நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 36 சதவீதத்தினரும் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் இருந்த 34 சதவீதத்தினரும் அமெரிக்காவில் இருந்து 25 சதவீதத்தினரும் இத்தாலியில் 24 சதவீதத்தினரும் இலங்கையில் 3 சதவீதத்தினரும் மதங்களை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், இஸ்லாம் மற்றும் இந்து மதத்தில் பிறந்தவர்கள் தங்கள் மதத்தை மாற்றுவது அல்லது மத நம்பிக்கையை கைவிடுவது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் 2 சதவீதத்தினரும், வங்கதேசத்தில் 1 சதவீதத்தினர் மதங்களை விட்டு வெளியேறி உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை தெளிவாக காட்டுகிறது.
உலகில் கிருஸ்துவ மதத்தினர் 31 சதவீதமாகவும், இஸ்லாம் மதத்தில் 25 சதவீதத்தினரும் இந்து மதத்தில் 15 சதவீதத்தினரும் உள்ள நிலையில், மதமற்றவர்கள் என்று உலகம் முழுக்க அடையாளப்படுத்திக்கொள்வோர் 4 வது இடத்தில் உள்ளனர். 14 சதவீதத்திற்கு மேற்பட்டோர் இந்த வகையில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இளைய தலைமுறையினரின் மாறுபட்ட கண்ணோட்டங்கள் மற்றும் சமூக மாற்றங்களே இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.