இம்பால், மார்ச். 8–
மணிப்பூரில் ராணுவத்தினர் நடத்திய சிறப்பு அதிரடி தேடுதல் வேட்டையில் 114 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் பயங்கரவாத அமைப்பினரின் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபுர், சுராசந்த்புர், கங்போக்கி, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, சேனாபதி, தொபல், ஜிரிபம் உள்ளிட்ட மாவட்டங்களில் ராணுவம் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், மணிப்பூர் மாநில போலீசார், சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப் மற்றும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினரும் பங்கேற்றனர்.
பிஷ்னுபுர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டு தேடுதல் வேட்டையில், துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல், சந்தேல் மாவட்டத்தில் ஏராளமான துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
காங்போக்கி மாவட்டத்தில் சோதனையின் போது, பதுங்கு குழிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் வேட்டையில் 114 ஆயுதங்கள், வெடிபொருட்கள், கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2 வார காலத்தில் ராணுவத்திடம் 1000க்கும் மேற்பட்ட ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், கையெறி குண்டுகளையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். ராணுவத்திடமிருந்து பறித்துச் சென்ற ஆயுதங்களை கையெறிக் குண்டுகளை 6ந் தேதிக்குள் ஒப்படைக்குமாறு கவர்னர் அஜய்குமார் பல்லா ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். சமூகத்தில் நல்லிணம் ஏற்பட மாநிலத்தில் அமைதி காக்க ஆயுத ஒப்படைப்பு அவசியம் என்று கவர்னர் கூறியிருந்தார்.