செய்திகள்

மக்களும் தமிழக அரசும் கடுமையாக எதிர்த்து டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தது மாபெரும் வெற்றி

Makkal Kural Official

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை, ஜன.27-

டங்ஸ்டன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது சாதாரண வெற்றியல்ல, மாபெரும் வெற்றி என்று 2 கிராமங்களில் நடந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது.

டங்ஸ்டன் திட்டம் செயல்படுத்தப் பட்டால், சுமார் 50 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றினார். இந்த நிலையில், மத்திய அரசு, டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் அரிட்டாபட்டி உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடினர்.

டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கிராம மக்களின் பிரதிநிதிகள் சென்னை வந்து முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் அரிட்டாபட்டி மற்றும் அ.வல்லாளப்பட்டியில் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடத்த இருக்கிறோம், அதற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

இதை ஏற்று நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு பகல் 1 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தார். அவருக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரையிலிருந்து மேலூர் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு 25 கி.மீ. தூரம் மக்கள் திரண்டு வழிநெடுகிலும் வரவேற்பளித்தனர். அதன்பின்னர் மேலூர் அருகே அரிட்டாபட்டிக்கு சென்று மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பது மக்களின் வெற்றி. மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார். இதனை தொடர்ந்து அ.வல்லாளப்பட்டிக்கு முதலமைச்சர் வந்தார். அங்கு நடந்த நன்றி தெரிவிப்பு விழாவில் கலந்து கொண்டு, அவர் பேசியதாவது:-

டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தை ரத்து செய்ய எப்படிப்பட்ட அழுத்தத்தை இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள் தந்தார்கள் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அதை உணர்ந்து உங்களால் உருவாக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சி, அதாவது உங்களுடைய நம்பிக்கை பெற்றிருக்கக்கூடிய உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சியில், நாடாளுமன்றத்தில் நம்முடைய கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் எல்லோரும் பேசி, அதற்குப் பிறகு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அது இன்றைக்கு நாம் நினைத்ததுபோல வெற்றி அடைந்திருக்கிறது.

அந்த தீர்மானத்தை நிறைவேற்று கிறபோது, அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய முஸ்லிம் லீக் போன்ற எல்லா கட்சிகளும் சட்டமன்றத்தில் ஒன்று சேர்ந்து அந்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.

அப்படி நிறைவேற்றிக்கொடுத்த நேரத்தில் நான் தெளிவாக கூறினேன். மக்களால் இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய நான், இந்த முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் வரை நிச்சயமாக டங்ஸ்டன் திட்டம் வராது, அதைப்பற்றி மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துக்கூறினேன்.

எனக்கு பாராட்டு, நன்றி சொல்வதைவிட, உங்களுக்குத்தான் பாராட்டு, நன்றி சொல்லவேண்டும்; நமக்கு இதில் வெற்றி கிடைத் திருக்கிறது. உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கக்கூடிய நாங்கள் என்றைக்கும் உங்களுக்குத் துணை நிற்போம். சட்டசபை தேர்தல் வரயிருக்கிறது. அந்த தேர்தலில் நீங்கள் எல்லாம் என்ன முடிவோடு இருக்கிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படா தீர்கள். இது கலைஞரால், அண்ணா ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஆட்சி. தந்தை பெரியாரின் வழியோடு நடைபெறக்கூடிய ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி. உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி என்பதை மனதில் வைத்துக் கொண்டு, என்றைக்கும் நீங்கள் ஆதரவு தாருங்கள்.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த நினைத்தால் அதனை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி, மக்களின் நலனைக் காக்கும்.

இது நமக்கான வெற்றி. டங்ஸ்டன் திட்டத்தை மக்கள் சக்தியோடு அதனை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் ஒன்று திரண்டு டெல்லி நோக்கி பெரிய பேரணி நடத்தினார்கள். அவர்களின் போராட்டம் 2 வருடங்கள் நடைபெற்ற பின்பே வெற்றி கிடைத்தது. ஆனால் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்பட்ட செய்தி வெளியான உடனேயே மக்களின் போராட்டம் நடத்தினார்கள். அதன் காரணமாக மூன்றே மாதத்தில் அந்தத் திட்டம் வராது என மத்திய அரசு பணிந்து ரத்து செய்துள்ளது. இதற்கு காரணம் மக்களும், தமிழக அரசும் காண்பித்து இருக்கக்கூடிய கடுமையான எதிர்ப்புதான். இப்போது கிடைத்திருக்கும் வெற்றி சாதாரண வெற்றி அல்ல, மாபெரும் வெற்றி. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூலக்காரணம் மாநில அரசின் அனுமதி இல்லாமல் முக்கிய கனிம வளங்களை மத்திய அரசு ஏலம் விடலாம் என நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசால் கொண்டுவந்த சட்டம்தான்.

இந்த சட்டம் கொண்டு வந்தபோது நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றிய போது, அன்று தி.மு.க. கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அ.தி.மு.க. அந்த மசோதாவை எதிர்க்கவில்லை. அவையில் எம்.பி. தம்பிதுரை, இந்தச் சட்டத்தை ஆதரித்து பேசினார். இதுதான் டங்ஸ்டன் பிரச்சினைக்கு தொடக்க புள்ளியாக இருந்தது. இதைத்தொடர்ந்து 2 முறை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதை அரசியல் காரணங்களுக்காக சிலர் மறைக்க பார்க்கிறார்கள். தொடக்கத்தில் இருந்து இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால் திட்டமிட்டு பொய் பிரசாரம் பரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் கலெக்டர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

#tungsten mining #ban #m.k. stalin #Tamilnadu

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *