புதுடெல்லி, பிப்.4–
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்.
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி வரும் 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுகிறது.
பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் எனவும், இதனால் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய நாளான வசந்த பஞ்சமி நாளில் சுமார் 2.33 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினார்கள்.
35 கோடி பேர்
புனித நீராடினர்
இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி, துறவிகளுடன் கலந்துரையாடுகிறார்.