சென்னை, டிச. 19–
மகா கும்பமேளாவின் போது பயணிகள் ரயிலில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சில ஊடகங்கள் செய்திகளை பரப்பி வருவது இந்திய ரயில்வேயின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தச் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதுடன், அது மக்களை தவறாக வழிநடத்துபவை என்பதால் இந்திய ரயில்வே திட்டவட்டமாக இதனை மறுக்கிறது.
இது தொடர்பாக இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்லுபடியாகக் கூடிய உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது இந்திய ரயில்வேயின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் பயணச்சீட்டு இல்லாத பயணம் தண்டனைக்குரிய குற்றமாகும். மகா கும்பமேளா அல்லது வேறு எந்த நிகழ்ச்சிகளின் போதும் இலவச பயணத்திற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை என்பதை ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.
மகா கும்பமேளாவின் போது பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்ய இந்திய ரயில்வே உறுதிபூண்டுள்ளது. அதனால், எதிர்பார்க்கப்படும் பயணிகளின் வருகையை நிர்வகிக்க, சிறப்பு ஹோல்டிங் பகுதிகள், கூடுதல் பயணச்சீட்டு கவுண்ட்டர்கள் மற்றும் பிற தேவையான வசதிகளை நிறுவுவது உட்பட போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.