மும்பை, அக். 23–
மகாராஷ்டிராவில் 45 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை சிவசேனா வெளியிட்டு உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாணேயில் உள்ள கோப்ரி–பஞ்ச்பகாதி தொகுதியில் போட்டியிடுகிறார்.
288 சட்டமன்ற தொகுதிகளை மகாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மகாயுதி கூட்டணியில், பா.ஜ.க.–சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் முதல் கட்டமாக 45 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை சிவசேனா அறிவித்துள்ளது. அதில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி–பச்பாக்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
2022ம் ஆண்டு அப்போதைய மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாகவும் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சாக்ரி தொகுதியில் மஞ்சுளா காவிட், சோப்டா தொகுதியில் சந்திரகாந்த் சோனாவானா, ஜல்கான் தொகுதியில் குலாப்ராவ் பாட்டீல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
அமைச்சர்கள் தீபக், அப்துல் சத்தர், சம்புராஜ் தேசாய், தாதா பூஸ் ஆகியோர் முறையே சவந்த்வாடி, சிலோட், பதான், மலேகான் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
சிவசேனை கட்சி பல தலைவர்களின் உறவினர்களையும் களமிறக்கியுள்ளது.
ராஜபூரில் அமைச்சர் உதய் சமந்தின் சகோதரர் கிரண் சமந்தும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் அனில் பாபரின் மகன் சுஹாஸ் பாபர், சாங்லி மாவட்டத்தில் உள்ள கானாபூரிலும், மும்பை வடமேற்கு மக்களவை உறுப்பினர் ரவீந்திர வைகரின் மனைவி மனிஷா வைக்கர், ஜோகேஸ்வரி (கிழக்கு) தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் அட்சுலின் மகன் அபிஜித் அட்சுல் அமராவதி மாவட்டத்தில் உள்ள தர்யாபூர் தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். சத்ரபதி சம்பாஜிநகர் மக்களவை உறுப்பினர் சந்தீபன் பும்ரேவின் மகன் விலாஸ் பும்ரே பைதான் தொகுதியில் போட்டியிடுகிறார்.முன்னதாக பா.ஜ.க. 99 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்ட நிலையில், ஆளும்கட்சியான மகாயுதி, தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23–ந்தேதி நடைபெறவுள்ளது.