செய்திகள்

மகள் உயிருக்கு ஆபத்து: துர்காபூரில் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணின் பெற்றோர் வேதனை

Makkal Kural Official

புவனேஸ்வரம், அக்.13–

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 23 வயது மருத்துவ மாணவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவளது பெற்றோர் கூறியிருக்கிறார்கள்.

ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தபோது பாலியல் கொடுமை சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தங்கள் மகளை, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்துக்கு மாற்றி, சிகிச்சை அளிக்க உதவி செய்யுமாறு அம்மாநில முதல்வருக்கு பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலித் பெண்ணான மருத்துவ மாணவி, தனது ஆண் நண்பருடன் மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே சென்ற போது, அங்கிருந்த 3 பேரால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து அறிந்ததும், ஒடிசாவிலிருந்து விரைந்து சென்ற பெற்றோர், மேற்கு வங்கத்தில் இருந்தால், தங்கள் மகளைக் கொன்றுவிடுவார்கள் என்றும், மருத்துவமனைக்கு வெளியே தான் பாதுகாப்பின்றி ஒளிந்துகொண்டிருப்பதாகவும் நீரிழிவு நோயாளியான மனைவி பாதுகாப்பற்ற முறையில் மகளுடன் இருப்பதாகவும், உடனடியாக புவனேஸ்வரம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் ஒடிசா முதல்வர் மோகன் சரன் மாஜிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஒடிசா அரசு அதிகாரிகள், பாலாசோர் சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை சந்தித்த நிலையில், பெற்றோரிடம், ஒடிசா முதல்வர் தொலைபேசியில் பேசியபோது, இந்த கோரிக்கையை அவர்கள் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

‘‘பெண்கள் இரவில் வெளியே செல்ல வேண்டாம்’’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு சர்ச்சையான நிலையில், என் மகள் நள்ளிரவில் வெளியே சுற்றுவில்லை. அவர் இரவு 8 மணிக்குத்தான் வெளியே வந்துள்ளார் என்று தந்தை கூறுகிறார். தன்னுடைய ஆண் நண்பருடன் வெளியே வந்த மருத்துவ மாணவியை, மர்ம நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தபோது, அந்த நபர் தப்பித்து ஓடியிருக்கிறாரே தவிர, உதவிக்குக் கூட யாரையும் அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *