சென்னை, மார்ச் 8–
சர்வதேச மகளிர் தினம் இன்று அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் மகளிர் அணி சார்பில் மிகவும் கோலாகலமாக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 77 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
பின்னர் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் பெண்களின் ஆதரவோடு மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என்றும் எடப்பாடி உறுதிப்பட கூறினார்.
சர்வதேச மகளிர் தின விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளரும், அண்ணா தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி மிக பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.
அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெண்கள் தலையில் பூச்சூடி, புத்தாடைகளுடன் மகிழ்ச்சியுடன் வந்து குவிந்திருந்தனர்.
விழாக்கோலம்
அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கொடி, தோரணங்கள், பேனர்கள் என களை கட்டியிருந்தது. தலைமைக்கழக வளாகத்தில் பெண்கள் குவிந்து, சாலைகளிலும் நின்று கொண்டிருந்தனர்.
எடப்பாடி வந்தபோது, அவருக்கு பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தார்கள். பா.வளர்மதி பெரிய பூங்கொத்து வழங்கி, பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அவருக்கும் மற்றும் அனைத்து பெண்களுக்கும் இதயபூர்வ மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். எடப்பாடியை வாழ்த்தி பெண்கள் கோஷமிட்டனர்.
புறாக்களை பறக்கவிட்டார்
நிகழ்ச்சியின் தொடக்கமாக எடப்பாடி பழனிசாமி, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூவண்ண பலூன்களைப் பறக்கவிட்டார். தொடர்ந்து, வெண்புறாக்களையும் பறக்கவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தலைமைக் கழக வளாகத்தின் வலதுபுறம் அமைக்கப்பட்டிருந்த மேடையில், தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 77 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கழக மகளிர் அணி செயலாளர் பா. வளர்மதி மற்றும் நிர்வாகிகளுக்கும், வீராங்கனைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சாக்லேட் மாலை
முன்னதாக, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு, கழக மகளிர் அணிச் செயலாளர் பா. வளர்மதி தலைமையில், மகளிர் அணியினர் ஆளுயர சாக்லேட் மாலை அணிவித்தனர்.
* உலக மகளிர் தின சிறப்புப் பாடல் அடங்கிய குருந்தகடினை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
* கழக மகளிர் அணியைச் சேர்ந்த ஆர்த்தி மாரியம்மாள் அவுலியாவால் தயார் செய்யப்பட்டிருந்த, ‘நெஞ்சமெல்லாம் எடப்பாடியார் தலை நிமிர் தமிழ் நாடு 2026’ என்ற நூலினையும் வெளியிட்டார்.
* நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, ஏழை, எளிய மகளிர் பயன்பெறும் வகையில், 19 பேருக்கு தையல் மெஷின், 5 பேருக்கு இட்லி பாத்திரம், மீன் வியாபாரம் செய்யும் 5 பெண்களுக்கு மீன் விற்கும் கூடை, 5 பேருக்கு டீ விற்கும் கேன், பிஸ்கட் பாக்கெட் மற்றும் 1000 பேர்களுக்கு புடவை வழங்கப்பட்டது.
* தலைமைக் கழக இணைப்புக் கட்டடத்தின் கீழ்தளத்தில் உள்ள மேடையில் 1,000 பேர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
* நிறைவாக, ‘மகளிர் நலன் காக்க மாற்றம் வேண்டும்’ என்ற ஹாஷ்டேக்–ல் கையொப்பம் இட்டு துவக்கி வைத்தார்.
கழக மகளிர் அணியின் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை எழுச்சியுடன் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை, கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி சிறப்பான முறையில் செய்திருந்தார்.
சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியில், கழக மகளிர் அணியின் மாநில துணை நிர்வாகிகளும், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்களும், நிர்வாகிகளும் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும், செயல் வீராங்கனைகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறி மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.
இன்றைய நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக, கழக மகளிர் அணியினர் பெருந்திரளான அளவில் திரண்டிருந்து பூரண கும்ப மரியாதை வழங்கியதோடு, தலைமைக் கழகம் அமைந்துள்ள சாலை முழுவதும் மகளிர் வரிசையாக நின்றிருந்து மலர் தூவி வரவேற்றனர். மேலும், சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற, சாலையின் இருமருங்கிலும் கழகக் கொடித் தோரணங்கள், வரவேற்புப் பதாகைகள் அழகுற அமைக்கப்பட்டு, கழக கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற, பேண்டு வாத்தியம், செண்டை மேளம் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றைய நிகழ்வால், தலைமைக் கழக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, கிருத்திகா முனியசாமி, நடிகை கவுதமி, டாக்டர் சரோஜா, மரகதம் குமரவேல் எம்.எல்.ஏ., கனிதா சம்பத், ராஜலட்சுமி, கலைச்செல்வி, சசிரேகா, செல்வி ராமஜெயம், மகேஸ்வரி உட்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.