அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்
சென்னை, மார்ச்.21-
யார், யார் மகளிர் உரிமை தொகை பெற முடியும் என்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளி யிடப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்றும், இதை எடப்பாடி பழனிசாமி முழுவதுமாக படிக்காமல் கருத்து தெரிவித்து உள்ளார் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
சட்டசபை வளாகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் கொடுக்கப்பட்ட 85 சதவீத வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். மீதம் இருக்கும் 15 சதவீத வாக்குறுதியும் நிறை வேற்றப்படும் என்று சொல்லியிருக்கிறார். மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு என்ன தகுதியை நிர்ணயிக்க போகிறார்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் கேட்டு இருக்கிறார். இந்த திட்டத்தில் யார், யார் மகளிர் உரிமை தொகையை பெற முடியும் என்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை அவர் முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிகிறது.
ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வழங்க மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்து சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் உரிமைத்தொகை வழங்கும் மகத்தான திட்டத்தை முதலமைச்சர் தலைமையிலான அரசு அறிவித்துவிட்டது. தேர்தலில் கொடுக்காத வாக்குறுதியையும் நம்முடைய முதலமைச்சர் நிறைவேற்றியிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.