நியூயார்க், பிப். 3–
அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடி குறித்து, ஹிண்டர்பர்க் ஆய்வு அறிக்கை வெளியான நிலையில், கவுதம் அதானி தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்திலிருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். மேலும் இதனை அடுத்து போர்ப்ஸ் வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-10 இல் இருந்து வெளியேறியிருக்கிறார்.
2 இல் இருந்து 22 வது இடம்
இதற்கு முன் அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேர்களில் ஒருவர் மற்றும் ஆசியாவில் இந்தியர்களில் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இவரை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார்.
கவுதம் அதானி தற்போது போர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22- வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்தில் இருந்து 22 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் அதானி. பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் நீடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.