செய்திகள் நாடும் நடப்பும்

போரை நிறுத்துவதற்கு உதவ தயார்; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு

Makkal Kural Official

புதுடெல்லி, மே 10–

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பரிசீலிக்கத் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் இஷாக் தார் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கான வழிகளை ஆராய வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தி உள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல்களால் உலக நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் தாக்குதலை நிறுத்தி எல்லையில் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில், போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை தணிப்பதற்கு தேவையான வழிகளை இந்தியா கண்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கு இடையே பிரச்சினைகளை சரி செய்து, அமைதியை நிலை நாட்டுவதற்கு தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

போர் நிறுத்தம்:

பாகிஸ்தான் பரிசீலனை

முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார்வுடன் தொலைபேசி வாயிலாக மார்கோ ரூபோயி பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், இந்தியா மீதான பொறுமையை இழந்துவிட்டதால்தான் தாக்குதல் நடத்தினோம். இந்தியா தாக்குதலைத் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம். இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பரிசீலிக்கத் தயார் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபோயிவிடம் இஷாக் தார் கூறியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைபேசியில்

பேச்சுவார்த்தை

இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகள் இடையேயான மோதலுக்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், இந்திய ராணுவ அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசியதாகவும், இந்தியா தரப்பு அதிகாரிகளை நேரடியாக சந்தித்து பேச பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பதற்றம் தணிய வேண்டும்;

டொனால்டு டிரம்ப்

இந்தியா–பாகிஸ்தான் போர் பதற்றம் தணிய வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் லிவிட் கூறியதாவது, இந்தியா–பாகிஸ்தான் போர் பதற்றம் விரைவில் தணிய வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் விரும்புகிறார். பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆனாலும், இரு நாடுகளின் தலைவர்களுடனும் ஜனாதிபதி டிரம்ப் சிறப்பான உறவு வைத்துள்ளார். மோதலை முடிவுக்கு கொண்டுவருமாறு இரு நாடுகளின் தலைவர்களிடமும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தி வருகிறார்’ என்றார்.

போர் பதட்டம்:

தணிக்கும் முயற்சியில் சீனா

சீன வெளியுறவுத்துறை, இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த, ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விரும்புகிறது என்று, சீனா அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீன அரசின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

இந்த விவகாரத்தை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த மோதல், மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. அமைதி, ஸ்திரத்தன்மை உருவாக்குவதை கருத்தில் கொண்டு இரு தரப்பினரும் பிரச்னையை பெரிதாக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இது மிகவும் முக்கியம். சர்வதேச நாடுகளும் இதைத்தான் விரும்புகின்றன. பிரச்னைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விரும்புகிறது. இவ்வாறு சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சவுதி அரேபியாவும் கூறியுள்ளது.

அமைதி திரும்பு

ஜி7 நாடுகள் கோரிக்கை

ஜி7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உயர் பிரதிநிதிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:– கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இருநாடுகளின் மோதல் காரணமாக பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச தாக்குதலை நிறுத்த வேண்டும்.

இருநாடுகளில் உள்ள மக்களின் பாதுகாப்பில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம் உடனடியாக தாக்குதலை நிறுத்தி விட்டு, இருநாடுகளும் அமைதி திரும்புவதற்காக நேரடி பேச்சுவர்த்தை நடத்த வேண்டும். நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். தூதரக ரீதியாக தீர்வு காண தயாராக இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *