செய்திகள்

போரை நிறுத்தியதால் எனக்கு நோபல் பரிசு வேண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு

Makkal Kural Official

வாஷிங்டன், ஜன. 10:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாகவும், தன்னை விட அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்குத் தகுதியானவர் யாருமில்லை எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

வெனிசுவேலா நாட்டில் உள்ள எண்ணெய் வளங்கள் குறித்து எண்ணெய் மற்றும் வாயு நிறுவன அதிகாரிகளுடன், டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். .அப்போது பேசிய அதிபர் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதற்காக ஒன்றுமே செய்ததில்லை என விமர்சனங்களை முன்வைத்தது பெரும் பேசுப் பொருளாகியுள்ளது.

இதுபற்றி, அவர் பேசியதாவது:“மக்களுக்கு டிரம்ப்பை பிடிக்குமோ அல்லது பிடிக்காதோ எனக்குத் தெரியாது. ஆனால், நான் 8 பெரிய போர்களை நிறுத்தியுள்ளேன். இதில், சில போர்கள் 25 மற்றும் 36 ஆண்டுகளாக நடைபெற்று வந்தவை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல்கள் போராக உருமாறத் துவங்கியிருந்தன.

ஏற்கெனவே, 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. நீங்கள் நிறுத்தக்கூடிய ஒவ்வொரு போருக்கும் ஒரு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். வரலாற்றில் என்னை விட அந்த விருதுக்கு தகுதியானவர்கள் வேறு யாருமில்லை’’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இத்துடன், கடந்த 2025 ஆம் ஆண்டு வாஷிங்டன் வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அணுசக்தி பலமுடைய இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையிலான போரை நிறுத்தி லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்குத் தனக்கு நன்றி கூறியதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எதுவும் செய்ததில்லை எனவும், அவருக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என தனக்குத் தெரியவில்லை எனவும் டிரம்ப் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *