அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இறுதி சடங்கில் பங்கேற்பு
வாடிகன், ஏப். 26–
வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
கடந்த 3 நாள்களில் மட்டும் 2.5 லட்சம் பேர் போப் பிரான்சிஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாக வாடிகன் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பார்வை நேரம் முடிவதற்கு முன்னரே புனித பீட்டர் சதுக்கம் மூடப்பட்டதினால் அஞ்சலி செலுத்த வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பியதாகக் கூறப்படுகிறது. நேற்று மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் ஆண்டவரின் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போப் ஆண்டவரின் உடலுக்கு சிறப்பு வழிபாடுடன் (திருப்பலி) இறுதிச்சடங்கு நடந்தது. வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வாடிகன் சென்றார். 2 நாள் பயணமாக வாடிகன் சென்ற ஜனாதிபதி, இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பாக பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் சென்ற மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் நலன் மற்றும் மீன்வளத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், கோவா சட்டசபை துணை சபாநாயகர் ஜோசுவா டி ஜோசுவா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து ஜனாதிபதி அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகனின் புனித பீட்டர் பசிலிக்காவில் போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தினார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகிய இருவரும் வாடிகனில் நேற்று போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
போப் ஆண்டவர் இறுதிச்சடங்கில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அந்தவகையில் 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பை உறுதி செய்தது வாடிகன்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா என பல நாடுளின் தலைவர்கள் வாடிகன் வந்து, இறுதி சடங்கில் பங்கேற்றனர்.