செய்திகள்

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவு: இந்தியாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

Makkal Kural Official

புதுடில்லி, ஏப்.22–

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், வயது 88, இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் நேற்று காலமானார்.

போப் ஆண்டவர் வசித்து வந்த சாந்தா மார்த்தா இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள அவரது உடலுக்கு, வாடிகனில் உள்ள கர்தினால்கள், பிஷப்கள், பாதிரியார்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட திருச்சபையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

”துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்; அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

போப் மறைவை ஒட்டி, இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும். தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவதுடன், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக தலைவர்கள் இரங்கல்

இதற்கிடையே போப் ஆண்டவர் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக சர்வதேச நாடுகளின் ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், சமூக தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்தவகையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல்-சிசி, துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரசித் அல் மக்தூம், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேய் என சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு உள்ளனர்.

பிரதமர் மோடி

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

‘போப் பிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் உலகளாவிய கத்தோலிக்க சமூகத்ததுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கருணை, அடக்கம், ஆன்மிகத் துணிவு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவு கூரப்படுவார்’ என குறிப்பிட்டு இருந்தார்.

போப் ஆண்டவருடனான தனது சந்திப்பை அன்புடன் நினைவுகூர்வதாக குறிப்பிட்டு இருந்த பிரதமர் மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அவரது உறுதிப்பாடு தனக்கு மிகவும் ஊக்கத்தை அளித்ததாகவும் பாராட்டி இருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

போப் ஆண்டவர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

பரிவோடும், முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான போப் பிரான்சிஸின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

போப் பிரான்சிஸ் இரக்கம் மிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தினார். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான அவரது முன்னெடுப்புகள் ஆகியவை கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத்தந்தன.

இரக்கமிகுந்த செயல்கள், மனிதநேயத்தில் நிலைக்கொண்ட மதநம்பிக்கை எனும் வளமான மரபினை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவரது மறைவினால் தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ‘அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமை என்ற போதனையால் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய தலைவரை உலகம் இழந்துவிட்டது. அவரது மறைவுக்கு இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று கூறியுள்ளார்.

வி.ஜி.சந்தோசம்

வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள பதிவில், போப் பிரான்சிஸ் தமது 88–ம் அகவையில் வாட்டிகன் நகரில் தமது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்திகேட்டு மிகுந்த மனத்துயருக்கு ஆளான எண்ணற்றோரில் நானும் ஒருவன். ஐரோப்பாவிற்கு வெளியே பிறந்த முதல் தென் அமெரிக்க ‘போப்’ பான இவர் வாட்டிகனின் 266 போப்பாகத் தமது 76–ம் அகவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எத்துணை நலிவுகளுக்கு இடையேயும் இறைப்பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கிறித்துவ சமுதாயம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலக ஒற்றுமைக்காகவும் சமா தானத்திற்காகவும் அரும்பாடுபட்டு வந்தவர். இவரது மறைவு உலக நாட்டிற்கே ஈடு செய்தற்கரிய பேரிழப்பாகும். இவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! என்று கூறியுள்ளார்.

இதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், த.வெ.க தலைவர் விஜய், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயேசு அழைக்கிறார் நிறுவன தலைவர் பால்தினகரன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *