ஓரிரு நாளில் வீடு திரும்புவார்–மருத்துவர்கள்
வாடிகன், ஜூன் 10–
உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் ஆண்டவருக்கு நேற்று குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், இன்னும் ஒரு சில தினங்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மார்ச் மாதம் அவருக்கு சுவாச தொற்று நோய் ஏற்பட்டது. தற்போது அவருக்கு குடலில் பிரச்சனை ஏற்பட்டதால் ரோமில் இருக்கும் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையின்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறுவுரை வழங்கியதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை சுமார் 3 மணிநேரம் மேற்கொள்ளப்பட்டது.
ஓரிரு நாளில் வீடு திரும்புவார்
போப் ஆண்டவருக்கு நடந்த அறுவை சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “அவருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. வேறு எந்த நோய்த்தொற்றும் இல்லை. ஒரு சில நாட்கள் ஓய்வுக்கு பின் அவர் வீடு திரும்புவார்” என தெரிவித்தனர். “போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து பலரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அனைவரின் பிரார்த்தனைக்கு நன்றிகள்” என வாட்டிகன் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் இருந்தாலும் ஒரு சில அவசர விஷயங்களில் உடனே முடிவெடுக்க வேண்டுமென்றால், அவர் ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்தே முடிவெடுப்பார் என வாட்டிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சந்திப்புகள் அனைத்தும் 18-ந் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.