மர்மம் உடைக்கும் வெண்ணிற ஆடை நிர்மலா
‘வெண்ணிற ஆடை’:
ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, இருவருக்குமே அது முதல் படம். திரைத்துறை கடந்து இருவரும் அரசியலில் கால்பதித்த தருணம், அரசியல் களம் இருவருக்கும் புதிது.

இணைந்து நடித்த இருவரும் நேர் எதிர் துருவமாக நிற்க வேண்டிய சூழல். காலங்கள் கடந்தது. இருவரும் அரசியல் நீரோட்டத்தில் பயணித்த போதும், பாதை வெவ்வேறு.
“தாய் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார் ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலாவின் பயணம் இன்று வரை அண்ணா திமுகவில்…
ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் (நாளை டிசம்பர் 5). ஜெயலலிதாவுடனான தனது கடந்த கால நினைவலைகளை “மக்கள்குரல்” நாளிதழின் சிறப்பு செய்திக்காக நம்மிடம் பகிர்ந்து கொண்டார் வெண்ணிற ஆடை நிர்மலா.
‘ஹாய்…. ஹலோ…’
அவர் மனம் நெகிழ்ந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டவை இதோ…
‘வெண்ணிற ஆடை’ படத்தில் நாங்கள் இரண்டு பேரும் புதுமுகங்கள். நாங்கள் இரண்டும் பேரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் மிகவும் குறைவுதான். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹாய்…. ஹலோ… இவ்வளவு தான் எங்களுக்கான உரையாடல் இருக்கும்.
‘வெண்ணிற ஆடை’ படத்தில் ‘நீ என்பது என்ன…’ என்ற பாடலில் ஜெயலலிதா மனபிறழ்வு போன்று நடித்திருப்பார்.
‘வெண்ணிற ஆடை’ ப்ரிவயூ பார்த்தபோது, இது இந்த பெண்ணுக்கு முதல் படம் தானே…! என் மாதிரிதானே இவரும் சின்ன பெண். இவரால் எப்படி இப்படி நடிக்க முடிந்தது…! என்று ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
அதற்கு பின்னர் நாங்கள் நடித்த ஒரு சில படங்களில், ஒரே மேக்கப் ரூமில் தான் இருவரும் மேக்கப் போட்டுக்கொள்வோம். அப்போது நடனம் பற்றி பேசிக்கொள்வோம். ஷூட்டிங் இடைவேளையின் போது நடனம் தொடர்பான போட்டிகள் வைத்து நாங்கள் விளையாடுவோம்.
ஜெயலலிதாவை தூங்க வைக்க…
‘வெகுளிப்பெண்’ எனும் படத்தில் எஸ்.வரலட்சுமி அம்மாவுடன் நான் இணைந்து நடிக்கும்போது ஜெயலலிதாவை பற்றி அவர் சில தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
சந்தியா ஒரு நடிகையாக இருந்ததால் ஜெயலலிதா சிறு வயதில் இருந்தே தாய் பாசத்துக்காகவும், தாயின் அருகாமைக்காகவும் ஏங்கியவர் என்று எஸ்.வரலட்சுமி சொல்வார்.
இரவு நேரத்தில் தூங்க போகும்போது, சந்தியா இல்லாததால் ஜெயலலிதா ஏங்கி போவார்.
அதனால், சந்தியாவின் புடவையை எஸ்.வரலட்சுமி கட்டிக்கொண்டு ஜெயலலிதாவின் பக்கத்தில் படுத்து தூங்குவார்.
அந்த புடவை வாசத்தில், அம்மா தன் பக்கத்தில் படுத்து இருப்பதாக நினைத்து ஜெயலலிதா தூங்கிவிடுவார் என, எஸ்.வரலட்சுமி சொல்வார். இதை கேட்ட போது அவர் மீது எனக்கு இரக்கம் ஏற்பட்டது.
எனது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, நானும் சிறுமி தான். அம்மாவின் அருகாமைக்காக ஏங்கி இருக்கிறேன். அதனால் ஜெயலலிதாவின் ஏக்கத்தை என்னால் உணர முடிந்தது.
நளினியை மறவாத ஜெயலலிதா
ஜெயலலிதாவுடன் படித்தவர் நளினி. இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தியின் மகள். ஒரு கட்டத்தில் நளினி பற்றிய தகவல் இல்லை. ஜெயலலிதா எவ்வளவோ தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதற்கு பின்னர் ஜெயலலிதா பெரிய ஸ்டாராகி விட்டார்.
ஒரு நாள் எஸ்.வரலட்சுமி வீட்டு நிகழ்ச்சியில் நளினியை பார்த்த ஜெயலலிதா, அவரிடம், “நீ வீடு மாறி போன பிறகு உன்னை கண்டுபிடிக்க முடியவில்லை; ஆனால், நான் சினிமா ஸ்டாராச்சே… நீ நினைத்தால் என்னுடைய வீட்டை எளிதாக கண்டுபிடித்திருக்கலாமே… நீ ஏன் என்னை வந்து பார்க்கல” என்று கேட்டார்.
அதற்கு நளினி, ‘நீ பெரிய ஸ்டராகிவிட்டாய். நான் வந்தால் உன்னை பார்க்க முடியுமா?, இப்போது உனக்கு புதிய தோழிகள் கிடைத்திருப்பார்கள். என்னை மறந்திருப்பாய்’ என்று கிண்டலாக பதில் சொல்லி இருக்கிறார்.
அதற்கு ஜெயலலிதா, ஒரு காலத்திலும் என்னை அப்படி நினைக்காதே… எத்தனை காலம் ஆனாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். நட்புக்கு எவ்வளவு மரியாதை கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.
தங்கவிக்ரகம் என்னுடன்…
சிவாஜி ஒரு முறை பேசும்போது, ”நடன அரங்கேற்றத்தில் தங்கவிக்ரகமாக ஜொலித்த ஜெயலலிதா, ஒரு நாள் ஹீரோயினாக என்னுடனே நடிப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று சொன்னார்”.
ஆச்சரியப்பட்ட எம்ஜிஆர்
நானும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரு படத்திற்காக, மும்பையில் ஒரு தீவில் ஹெலிகாப்டர் காட்சி எடுக்கப்பட்டது.
அப்போது, எம்ஜிஆர் என்னிடம் சொன்னது, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்காக, கோவா கடல் நடுவே ஒரு தீவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, காலையில் எம்ஜிஆர் உட்பட அனைவரும் ஜெயலலிதாவை விட்டு விட்டு ஷூட்டிங் நடந்த தீவுக்கு வந்து விட்டார்கள்.
சிறிய பெண் ஜெயலலிதா. கரையிலிருந்து ஒரு சிறிய படகை எடுத்துக்கொண்டு ஜெயலலிதா தனியாக தீவுக்கு வந்துவிட்டார் என்று எம்ஜிஆர் ஆச்சரியத்துடன் சொன்னார்.
ஜெயலலிதாவை பற்றி நான் கேள்விபட்டதெல்லாம் வைத்து அவர்மீது எனக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.
ஜானகி சொன்னதால்…
ஆனால், அரசியலில் அவரை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 1989ல் போடி சட்டமன்ற தொகுதியில் ஜானகி அம்மா அணி வேட்பாளராக நான் களமிறக்கப்பட்டேன்.
இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நான் தாயாக மதிக்க கூடிய ஜானகி அம்மா கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவருக்காக நான் போட்டியிட வேண்டியதாகவிட்டது.
போடி தொகுதியில் நான் போட்டியிடுவதை மிகவும் ரகசியமாக வைத்து இருந்தார்கள்.
அது எப்படி என்றால், சென்னையிலிருந்து கார் மூலமாக போடி தொகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது, காலையில் டீ குடிக்க இறங்கினோம். அப்போது, டீக்கடையில் பேப்பர் பார்த்தபோது, அதில் என் பெயருக்கு பதிலாக வளர்மதி போடி தொகுதியில் போட்டியிடுவதாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
நான் போட்டியிடுவதை அவ்வளவு ரகசியமாக வைத்திருந்தார்கள். அதை நினைத்து இன்று வரை நான் மனதுக்குள் சிரிப்பதுண்டு.
தேவகி நர்சிங் ஹோமில்…
பிரச்சாரத்தில், சுலோசனா சம்பத்தும், வளர்மதியும் தான் என்னுடன் வந்தார்கள். ஜெயலலிதாவை எதிர்த்து நடந்த பிரச்சாரத்தில் நான் பேச வேண்டியதை சுலோசனா சம்பத்தும், வளர்மதியும் எழுதி கொடுத்தார்கள். அதில் ஒரு சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. அதனை மாற்றி எனக்கு சரியென்று பட்டதை பேசினேன். பிரச்சாரத்தில் ஜெயலலிதாவை விமர்சித்து நான் பேசவில்லை.
எங்களுக்கு தெரியும் ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்று, இருந்தாலும் ஜானகி அம்மையார் சொன்னதன் அடிப்படையில் போட்டியிட்டேன்.
அப்போது ஜெயலலிதாவுக்கு கட்சியின் பெரும் தலைவர்கள் ஆதரவு இருந்தது. ஜெயலலிதாவின் பின்புலத்தில் மத்திய அரசு ஆதரவு இருந்ததாக கூட நான் கேள்விப்பட்டேன்.
போடி தேர்தலுக்காக 30 நாள் பிரச்சாரம் செய்ததுடன், அரசியலில் இருந்து நான் ஒதுங்கி கொண்டேன். போடி தேர்தலுக்கு பின்னர், ஜெயலலிதா விபத்தில் சிக்கி தேவகி நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
என்னை அழைத்த ஜானகி அம்மையார், நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம். நீ, சுலோசனா அம்மாவுடன் சென்று, ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு வா என்று கூறினார்.
தேவகி மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து பேசினேன்.
ஜெயலலிதாவின் பெருந்தன்மை
அண்ணா திமுக தொண்டர்கள் இன்றுவரை, வெண்ணிற ஆடை நிர்மலா, ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் தானே என்று நினைக்க கூடும்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த நாள் வரை, ஒரு நாள் கூட, என்னை ஏன் போடி தொகுதியில் எதிர்த்து நின்றாய் என்று ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை.
அவர் நினைத்து இருந்தால், என்னை சந்தித்த தருணங்களில், இந்த கேள்வியை கேட்டிருக்கலாம். அவர் என்னை புரிந்த விதம். அதனால் தான் அவர் மீது அளவு கடந்த மரியாதை ஏற்பட்டது.
எம்ஜிஆரின் கோபத்தை எப்படி சமாளித்தார் ஜெ.
எம்ஜிஆருடன் நான் நடித்து இருக்கிறேன். அவருடைய குணாதிசயங்கள் எனக்கு தெரியும். எந்த அளவுக்கு அன்பு செலுத்துகிறாரோ, அதைவிட இரண்டு மடங்கு கோபமும் வரும்.
எம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜெயலலிதா இணைந்து நடித்து இருக்கிறார். எம்ஜிஆரின் கோபத்தை எதிர்கொள்வதற்கான பண்பட்ட குணத்தை ஜெயலலிதா கொண்டிருக்கலாம். இல்லையென்றால் எம்ஜிஆருடன் இணைந்து இவ்வளவு படங்கள் நடித்து இருக்க முடியாது.
அரசியல் வாழ்க்கையிலும் எம்ஜிஆருடன் இணைந்து பயணிக்க ஜெயலலிதாவின் பண்பட்ட குணம் கூட ஒரு காரணமாக இருக்க கூடும் என்று நான் யூகித்து கொண்டேன்.
பேச நினைத்ததை பேசாமல் போனார்
எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தியை கவுரவிக்கும் விழாவில் கடைசியாக ஜெயலலிதாவை நான் சந்தித்தேன். அப்போது என்னை பார்த்த ஜெயலலிதா, உங்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கிறது. வீட்டுக்கு வாங்க என்றார்.
ஆனால் அதற்கு பின் அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் அமையவே இல்லை. பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதா இருக்கும் போது அவரை பார்க்க சென்றேன். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை.
அவர் என்னிடம் என்ன சொல்ல நினைத்திருப்பார் என்று… நினைக்கும் போது எனக்கு அது இன்று வரை மனக்குறையாகவே இருக்கிறது.
தாய் வீட்டுக்கு வாங்க…
முதன் முதலாக எம்ஜிஆர் தனது கைப்பட உறுப்பினர் சீட்டை எழுதி, அண்ணா திமுகவில் என்னை இணைத்தார். அடுத்து ஜெயலலிதா என்னை அண்ணா திமுகவில் இணைத்துக்கொண்டார்.
கட்சி அலுவலகத்தில் வைத்து தான் எனக்கு உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா கொடுத்தார். நான் அப்போது பாரதீய ஜனதாவில் இருந்தேன். ‘தாய்வீட்டுக்கு திரும்பி வாங்க…’ என்று, என்னை அவரே அழைத்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது, ஜெயலலிதாவின் பெருமையை, சாதனையை சொல்லி ஓட்டுக் கேட்பது எனக்கு ஆறுதல் தருகிறது.
அது, ஒரு நல்ல மனுஷியை பற்றி மக்கள் மத்தியில் பேசுகிறோம் என்ற மன நிறைவை தருகிறது என்று தனது நினைவலைகளை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார் வெண்ணிற ஆடை நிர்மலா.
ஷீலா பாலச்சந்திரன்