செய்திகள்

போகிப் பண்டிகை: பழைய துணி, டயர், ரப்பர் ட்யூப், பிளாஸ்டிக்கை எரிக்காமல் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை, ஜன.7–

போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13–ந் தேதி மற்றும் 14–ந் தேதி ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் ட்யூப் மற்றும் நெகிழி (பிளாஸ்டிக்) ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அதனடிப்படையில், சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, அவற்றைத் தனியாக மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக, பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் மூலம் விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆடியோ மூலம் விழிப்புணர்வு விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *