சபாநாயகர் தீர்ப்பு
சென்னை, ஜன. 11–
பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குபதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மை என சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார்.
இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை ஏற்று இருதரப்பிலும் ஆதாரங்கள் இன்று வழங்கப்பட்டது. பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் 20 பேர் சென்று சபாநாயகரிடம் வழங்கினர்.
இதையடுத்து இருதரப்பினரும் அளித்த ஆதாரங்களை ஆராய்ந்து பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குபதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். பாலியல் வன்கொடுமை நடந்து 12 நாட்களுக்கு பின்னரே எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு தரப்பு ஆதாரங்களையும் நான் பார்த்துவிட்டேன், நான் கூறும் தீர்ப்பு தான் இறுதியான தீர்ப்பு. இருவரும் இதோடு முடித்துக் கொள்ளுங்கள்” என்று சபாநாயகர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பேச்சுக்கு சட்டசபையில் அண்ணா தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.